ரோட்டுக்கடை நடத்தும் MBA பட்டதாரி தம்பதிகள் … ஏன்தெரியுமா?
பகுதி நேரமாக ரோட்டுக் கடை நடத்தும் எம்பிஏ பட்டதாரி தம்பதிகள்… ஏன் தெரியுமா..?
மும்பையில் தனியார் நிறுவன ஊழியர்கள் தங்கள் வீட்டில் சமையல் வேலை செய்யும் அம்மாவின் கணவரின் சிகிச்சை செலவிற்காக காலை நேரத்தில் ரயில் நிலையம் அருகே ரோட்டுக்கடை நடத்தி வருகிறார்கள்.
மும்பையில் தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை பார்க்கும் இரண்டு பேர் தினமும் சாலையோரத்தில் உணவுக் கடை நடத்துகிறார்கள் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆனால் இது உண்மை தான்.
பேஸ்புக்கில் தீபாளி பாத்தியா என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு போஸ்ட் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் தான் அவர் இந்த விஷயத்தை வெளியிட்டிருந்தார். அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : “பரபரப்பாக இயங்கி வரும் மும்பையில், மற்றவர்கள் குறித்து சிந்திக்கவே நேரமில்லை. ஆனால் இந்த அஸ்வினி மற்றும் அன்குஷ் என்ற சூப்பர் தம்பதியரைப் பற்றி நாம் தெரிந்து கொண்டே ஆக வேண்டும்.
கடந்த அக்.,2ம் தேதி நான் மும்பையில் காண்டிவலி ரயில்நிலையம் அருகே அதிகாலை நேரத்தில் சென்றேன். அங்கே இரண்டுபேர் சாலையோரத்தில் கடை போட்டு உணவு விற்பனை செய்து கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்தால் அப்படிக் கடை வைத்திருப்பவர்கள் போல் தெரியவில்லை. இவர்கள் ஏன் இதைச் செய்கிறார்கள் எனத் தெரிந்து கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டேன்.
அவர்கள் தாங்கள் கடை நடத்துவதற்குச் சொன்ன காரணம் தான் என்னை வியக்க வைக்கிறது. எம்பிஏ பட்டதாரியான இவர்கள், அவர்கள் வீட்டில் சமையல் வேலை செய்யும் அம்மாவின் கணவர் பாராலிசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்குச் சிகிச்சை செய்யப் பணம் இல்லாமல் இவர்கள் வீட்டில் சமையல் செய்யும் அம்மா திண்டாடியுள்ளார்.
அவர்களுக்கு உதவும் வகையில் அவர் சமைத்துத் தரும் உணவுகளை இவர்கள் விற்பனை செய்து அதில் வரும் பணத்தை அவர்களுக்குச் சிகிச்சைக்காக வழங்குகிறார்கள்.
காலை 4 மணிக்கு அவர்களது பணியை துவக்கி 10 மணி வரை வேலை பார்த்து விட்டு பின்னர் அவர்கள் தங்களது வேலைக்குச் செல்கிறார்கள். இந்த கடையில் இவர்கள் காலையில் அவல் உப்புமா, உப்புமா, இட்லி, புரோட்டா ஆகியவற்றை விற்பனை செய்கின்றனர்.
தனது வீட்டில் சமையல் வேலை பார்ப்பவருக்கு ஒரு பிரச்சினை என்றால் நாம் அதிகபட்சம் நம்மால் முடிந்த உதவியைச் செய்வோம் ஆனால் இந்தத் தம்பதி அவர்களுக்கு செய்ய இப்படி ஒரு யோசனையைக் கையாண்டிருப்பது அவர்களை ஒரு சூப்பர் ஹீரோவாகவே பார்க்க வைக்கிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
உயர்ந்த உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள் ..!
வாழ்க தம்பதியர்.. !