ஆட்டோ டிரைவர் முதல் முதலமைச்சர் வரை… மகராஷ்ரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் அரசியல் பயணம்✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
ஆட்டோ டிரைவர் முதல் முதலமைச்சர் வரை…ஏக்நாத் ஷிண்டேவின் அரசியல் பயணம்*
2019ம் ஆண்டு மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பின்னர் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்தபோது சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவியை பகிர்ந்துகொள்ள வேண்டும் என நிபந்தனை விதித்தது சிவசேனா. ஆனால் அதற்கு பாஜக சம்மதிக்காததால் கூட்டணி முறிந்தது. அப்போது அந்த இரு கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால் ஏக்நாத் ஷிண்டேவையே தங்கள் தரப்பில் முதலமைச்சர் பதவிக்கு முன்னிறுத்த விருப்பப்பட்டாராம் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரோ. தற்போது அந்த விருப்பம் நிறைவேறியிருக்கிறது. ஆனால் அதனை நினைத்து சந்தோஷப்படும் நிலையில்தான் உத்தவ் தாக்ரே இல்லை. ஏக்நாத் ஷிண்டேவால் முதலமைச்சர் அரியணையை மட்டும் உத்தவ் தாக்ரே இழக்கவில்லை, இனி சிவசேனாவை புதிதாக கட்டியெழுப்ப வேண்டும் என அவரே கூறும் அளவிற்கு கட்சியின் அடிப்படை கட்டமைப்பையே அசைத்து பார்த்துள்ளார் ஏக்நாத் ஷிண்டே.
சிவசேனாவிற்குள்ளிருந்து பால்தாக்ரேவின் குடும்பத்திற்கு எதிராக இப்படியொரு கலகம் இதற்கு முன் தோன்றியது இல்லை. அப்படியே தோன்றியிருந்தாலும் அது துளியும் வெற்றிகண்டதும் இல்லை. ஆனால் இன்றோ உத்தவ் தாக்ரேவை முதலமைச்சர் பதவியிலிருந்து இறக்கிவிட்டு தான் அந்த அரியணையில் ஏறியிருக்கிறார் ஏக்நாத் ஷிண்டே. சிவசேனாவின் 55 எம்.எல்.ஏக்களில் 39 பேரை தன் வசம் அணிவகுக்க வைத்த இந்த சூத்திரதாரி தனக்கான அரசியல் செல்வாக்கையும், வளர்ச்சியையும் தானே சுயம்புவாக கட்டியெழுப்பியவர். ஆட்டோ டிரைவராக தனது வாழ்க்கையை தொடங்கிய அவர் இன்று முதலமைச்சராக உயர்ந்திருப்பதே அதற்கு சாட்சி.
58 வயதான ஏக்நாத் ஷாம்பாஜி ஷிண்டே மகாராஷ்டிராவின் சாதரா மாவட்டத்தில் ஜவாலி பகுதியில் 1964ம் ஆண்டு பிறந்தார். பின்னர் ஷிண்டேவின் குடும்பம் தானேவிற்கு குடிபெயர்ந்தது. குடும்ப வறுமை காரணமாக பள்ளிப் படிப்போடு தனது கல்வியை நிறுத்திக்கொண்டார். ஆட்டோ ஓட்டுனராக தனது வாழ்க்கையை தொடங்கி குடும்ப வறுமையை நீக்க போராடிய ஷிண்டேவின் கவனத்தை, மக்களுக்காக சிவசேனா நடத்திய எழுச்சிமிகு போராட்டங்கள் ஈர்த்தது. பால்தாக்ரேவின் உணர்வுப்பூர்மான, எழுச்சிமிகு உரைகளால் ஈர்க்கப்பட்டு அக்கட்சியில் இணைந்தார்.
கிங் ஆஃப் தானே என்று வர்ணிக்கப்பட்ட ஆனந்த் திக்கேதான் அரசியலில் இவரது மானசீக குரு. கட்சிக் கூட்டங்களை, போராட்டங்களை ஒருங்கிணைப்பதில் ஷிண்டேவிற்கு இருந்த திறமையை கண்டு வியந்த ஆனந்த் திக்கே. ஷிண்டேவை அடுத்தடுத்தக் கட்டங்களுக்கு கொண்டு சென்றார் பால்தாக்ரேவிற்கும் இவரது திறமையை வெளிச்சம்போட்டு காட்டினார். இதனால் 1997ம் ஆண்டு நடந்த தானே மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு ஷிண்டேவுக்கு கிடைத்தது. தொடர்ந்து சுறுசுறுப்பாக அரசியலில் பயணித்துக்கொண்டிருந்தவரை முடக்கிப்போட்டது அந்த சம்பவம். கடந்த 2000ம் ஆண்டு ஜூன் 2ந்தேதி கிராமம் ஒன்றில் படகு சவாரி சென்ற ஏக்நாத் ஷிண்டேவின் மகன்களான திபேஷ் (வயது 11) சுபாதா (வயது 7 ) படகு நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் அரசியலிலிருந்து ஒதுங்கி பல மாதங்கள் வீட்டிற்குள் முடங்கி கிடந்தவரை ஆறுதல்படுத்தி, மீண்டும் ஆக்டிவ் அரசியலுக்கு கொண்டு வந்தார் ஷிண்டேவின் அரசியல் குருவான ஆனந்த் திக்கே. சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் தனது பயணத்தை தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே 2001ம் ஆண்டு தானே நகராட்சியின் தலைவராகி தனது பொது வாழ்க்கையில் முக்கிய மைல்க்கல்லை அடைந்தார்.
ஆக்ரோஷமான, உணர்வுப்பூர்மான அதிரடி அரசியல்தான் இவரது பாணி. போராட்டக்களங்கள்தான் இவரை அரசியலில் வளர்த்தெடுத்தன, மகாராஷ்டிரா, கர்நாடகா எல்லை பிரச்சனை வந்தபோது ஏக்நாத் ஷிண்டே நடத்திய போராட்டங்கள், பால்தாக்ரே மற்றும் அவரது குடும்பத்தினரின் கவனத்தை ஈர்த்து அந்த குடும்பத்தினருடன் நெருக்கமாக்கியது. 2004ம் ஆண்டு முதல்முறையாக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் தற்போது வரை சுமார் 18 வருடங்களாக தனது சட்டமன்ற பணிகளை தொடர்ந்து வருகிறார். கடந்த 2014ம் ஆண்டு மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா கூட்டணி ஆட்சி அமைந்தபோது முதல் முறையாக அமைச்சரானார் ஏக்நாத் ஷிண்டே.
2019ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின்னர் சிவசேனா தலைவர் பால்தாக்ரேவுடன் ஏக்நாத் ஷிண்டேவிற்கு மனக் கசப்புகள் தொடங்கின. ஷிண்டேவை முதலமைச்சர் பதவியை நோக்கி அழைத்து வந்த அரசியல் அதிரடிகளும் அந்த புள்ளியிலிருந்துதான் தொடங்கின. பால்தாக்ரேவின் இந்துத்துவா கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு சிவசேனாவில் சேர்ந்தவர் ஷிண்டே. இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்டு, தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் கூட்டணி அமைத்த உத்தல்தாக்ரே, இந்துத்துவா கொள்கையிலிருந்து விலகிச்செல்வதாக கருதினார் ஏக்நாத் ஷிண்டே. மேலும் அவர் துணை முதலமைச்சராவது மகா விகாஸ் அகாதி கூட்டணியால் நிறைவேறாமல் போனதாகவும் கூறப்பட்டன.
சிவசேனாவிற்குள் பால்தாக்ரேவின் மகன் ஆதித்யாவின் தாக்ரேவின் வளர்ச்சி, தனக்கான முக்கியத்துவத்தை குறைந்ததாக ஏக்நாத் ஷிண்டே அதிருப்தியில் உள்ளார் என அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் கொரோனா காலம் வந்தததாலும் முதுகெலும்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டதாலும் முதலமைச்சர் உத்தவ் தாக்ரே எம்.எல்.ஏக்களை சந்திப்பது குறைந்தது. இந்த இடைவெளியை தனக்கு சாதமாக பயன்படுத்திக்கொண்ட ஏக்நாத் ஷிண்டே எம்.ஏக்கள் ஒவ்வொருவராக தனது பக்கம் கொண்டு வந்ததாக மகாராஷ்டிர அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். தனது அரசியல் வியூகங்களாலும், அணுகுமுறையாலும், சிவசேனா எம்.எல்.ஏக்கள், சுயேட்சை எம்.எல்.ஏக்கள் என 50 எம்.எல்.ஏக்களை தனது பின்னால் அணி வகுக்க வைத்த ஏக்நாத் ஷிண்டே இன்று மகாராஷ்டிராவின் 20வது முதலமைச்சராகவும் ஆகிவிட்டார்.
ஆட்டோ டிரைவராக தனது வாழ்க்கையை தொடங்கி இன்று நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிராவின் முதலமைச்சராக உயர்ந்திருக்கும் ஏக்நாத் ஷிண்டே, சாமானியார்களாக இருந்து அரசியலில் சரித்திரம் படைத்தவர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.