கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் காதில்பஞ்சு வைத்து மாபெரும் போராட்டம், பரபரப்பு,நீதிமன்ற தீர்ப்புக்கெதிராக சரள்மண் அள்ளுவதை கண்டித்து, போராட்டம்
நீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக சரள் மண் அள்ளுப்படுவதை கண்டித்து கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்
சரள் மண் கொள்ளையை கண்டித்து கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸார் காதில் பஞ்சை வைத்து அடைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் சரள் மண் கொள்ளையை கண்டித்து கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் வழக்கறிஞர் பி.அய்யலுசாமி, நகர தலைவர் எஸ்.சண்முகராஜா உள்ளிட்ட பலர் காதில் பஞ்சை வைத்து அடைத்துக்கொண்டு கோஷங்கள் முழங்கியவாறு வந்தனர். அவர்கள் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சூரியகலாவிடம் வழங்கிய மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் 2-வது ரயில்வே இருப்பு பாதை பணி மீளவிட்டான் முதல் கோவில்பட்டி வரை நடைபெறுகிறது. இதற்கு குளங்களில் இருந்து விதிமுறைகளை மீறி சரள் மண் எடுக்கப்படுவதை தடுக்க வலியுறுத்தி பலமுறை மனு வழங்கி உள்ளோம். தற்போது உயர்நீதிமன்ற மதுரை கிளை தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் சரள் மண் அள்ள தடை விதித்துள்ளது. நீதிமன்ற தடை உத்தரவு உள்ள நிலையில் கோவில்பட்டி, கயத்தாறு வட்டங்களில் சரள் மண் ரயில்வே பணிகளுக்கு குளங்களில் இருந்து கொண்டு செல்வதை தடுக்க வேண்டும்.
சரள் மண் கொள்ளையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னரும் நடைபெறும் சரண் மண் கொள்ளையை நீதிமன்ற கவனத்துக்கும் கொண்டு செல்லப்படும்.
மேலும், சரள் மண் கடத்தல் சம்பந்தமாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் அடுத்து நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் வெள்ளை அறிக்கை மாவட்ட ஆட்சியர் வெளியிட வேண்டும், என தெரிவித்துள்ளனர்.