இந்தியாவில் 3.1 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்யும் ஜப்பான்…இரு நாட்டு பிரதமர்கள் சந்திப்பு✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்
இந்தியாவில் 3.1 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்யும் ஜப்பான்…இரு நாட்டு பிரதமர்கள் சந்திப்பு
பிரதமர் மோடியை ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா இன்று தில்லியில் சந்தித்து பேசவுள்ளார். அப்போது, உக்ரைன் விவகாரத்தில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து அவர்கள் ஆலோசிக்கப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, இந்திய பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை ஒருங்கிணைந்து எப்படி பலப்படுத்துவது என்பது குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக, இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய கிஷிடா, “உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு இந்தப் பயணத்துடன் ஒத்துப்போவதால், சர்வதேச ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், ஜப்பானும் இந்தியாவும் பல்வேறு விஷயங்களில் இணைந்து செயல்படும் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன்” என்றார்.
கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி, உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததையடுத்து, ரஷிய நிறுவனங்கள் மீதும் தனிநபர்கள் மீதும் ஜப்பான் தடை விதித்தது. பின்னர், உக்ரைனிலிருந்து வரும் அகதிகளை சேர்த்தும் கொண்டது.
உக்ரைன் விவகாரத்தை பொறுத்தவரை குவாட் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளில் இந்தியாவை தவிர மற்ற நாடுகள் ரஷியாவை கண்டித்துள்ளன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நான்கு நாடுகள் கொண்ட கூட்டமைப்பாக குவாட் விளங்குகிறது.
இதற்கு மத்தியில், இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள கிஷிடா, பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதியாக இரு நாட்டு உறவை பலப்படுத்துவதில் கவனம் செலுத்துவார் எனக் கூறப்படுகிறது. அந்த வகையில், அடுத்த ஐந்தாண்டுகளில் 42 பில்லியன் அமெரிக்க டாலர்களை ( இந்திய மதிப்பில் 3.1 லட்சம் கோடி ரூபாய்) இந்தியாவில் முதலீடு செய்யும் திட்டத்தை அவர் இந்த பயணத்தின் அறிவிப்பார் என ஜப்பான பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க |ஒளிபரப்பப்பட்ட புதினின் பேச்சை பாதியில் நிறுத்திய ரஷிய தொலைக்காட்சி…அதிரவைக்கும் உண்மை?
கடந்த 2014ஆம் ஆண்டு, ஜப்பான் பிரதமராக ஷின்சோ அபே பொறுப்பு வகித்துபோது, அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியாவில் 3.5 டிரில்லியன் யென் (ஜப்பான் பணம்) முதலீடு செய்யப்படும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
நகர்புற உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் அதிவேக புல்லட் ரயில் தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு கொண்டு வருவதிலும் ஜப்பான் ஆதரவு அளித்துவருகிறது.
இரு நாட்டு பாதுகாப்பு படையினருக்கிடையே உணவு, எரிவாயு மற்றும் பல பொருள்களை பரிமாறி கொள்ளும் வகையிலான ஒப்பந்தத்தில் இந்திய, ஜப்பான் கடந்த 2020ஆம் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.