உலக நாடுகளில் 5ஜி செல்போன் தொழில்நுட்பம் அறிமுகம்✍️அமெரிக்காவுக்கு ஏர் இந்தியா உள்ளிட்ட விமானங்கள் ‘திடீர்’ ரத்து பயணிகள் அதிர்ச்சி✍️முழுவிவரம் ✍️விண்மீன்நியூஸ்
அமெரிக்காவுக்கு ஏர் இந்தியா உள்ளிட்ட விமானங்கள் ‘திடீர்’ ரத்து பயணிகள் அதிர்ச்சி*
வாஷிங்டன்,
உலகின் பல நாடுகளில் 5ஜி செல்போன் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அங்கெல்லாம் 5ஜி சேவையால் கொரோனா பரவுகிறது என்றும், பறவைகளுக்கு ஆபத்து என்றும் செய்தி பரப்பப்படுகிறது. அமெரிக்காவில் அதிவேக திறன் கொண்ட 5ஜி செல்போன் தொழில்நுட்பம் ஏலம் விடப்பட்டுள்ளது. ஏலத்தில் எடுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள், இந்த தொழில்நுட்பத்தை நேற்று அறிமுகப்படுத்தின.
இதுதொடர்பான அறிவிப்பு வந்தபோதே, அமெரிக்காவில் உள்ள விமான நிறுவனங்கள் கவலை தெரிவித்தன. அதிவேக 5ஜி தொழில்நுட்பத்துக்காக நிறுவப்பட்ட செல்போன் கோபுரங்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சால், விமான போக்குவரத்து பாதிக்கப்படும் என்று தெரிவித்தன.
இதனால், விமானம் பறக்கும் உயரத்தை அறிய முடியாமல் விமானிகள் திணறுவார்கள். ஓடுபாதைக்கு அருகே செல்போன் கதிர்வீச்சு இருக்கும்போது, விமானம் புறப்படுவதிலும், தரை இறங்குவதிலும் பாதிப்பு ஏற்படும். முக்கிய கருவிகள் செயலிழந்து விடும். இந்த காரணங்களால், இந்தியாவை சேர்ந்த ஏர் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளின் விமான நிறுவனஙகள் அமெரிக்காவுக்கான விமான போக்குவரத்தை ரத்து செய்துள்ளன.
டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ, நியூயார்க் ஜான் கென்னடி ஆகிய விமான நிலையங்களுக்கும், மும்பையில் இருந்து நெவார்க் விமான நிலையத்துக்கும் 19-ந் தேதி (நேற்று) முதல் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
இதுபோல், எமிரேட்ஸ் விமான நிறுவனம், அமெரிக்காவின் பாஸ்டன், சிகாகோ, டல்லாஸ், ஹூஸ்டன், மியாமி, நெவார்க், ஆர்லாண்டோ, சான்பிரான்சிஸ்கோ, சியாட்டில் ஆகிய விமான நிலையங்களுக்கு விமானங்களை ரத்து செய்துள்ளது. விமான நிறுவனங்கள் முன்கூட்டியே அறிவிக்காமல், திடீரென இதை அறிவித்ததால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டதோடு, அதிர்ச்சியடைந்தனர்.