எட்டையபுரத்தில் மிஸ்டுகால் மூலம் பழக்கம்✍️ திருமணம் செய்ய மறுத்த இளம்பெண் படத்தை, பேஸ்புக்கில் போட்டு அவதூறு: வாலிபரை மடக்கி பிடித்த போலீஸ்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
எட்டையபுரத்தில் மிஸ்டுகால் மூலம் பழக்கம் திருமணம் செய்ய மறுத்த இளம்பெண் படத்தை பேஸ்புக்கில் போட்டு அவதூறு: வாலிபரை மடக்கி பிடித்தது போலீஸ்*
எட்டயபுரம்: கிருஷ்ணகிரி மாவட்டம், கங்காபிரம்பட்டி பட்டையூரைச் சேர்ந்த ராஜா மகன் மஞ்சுநாதன் (28). இவர் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியை சேர்ந்த திருமணமான இளம்பெண்ணுக்கு தவறுதலாக செல்போன் அழைப்பு விடுத்து பேசியுள்ளார். இதனையடுத்து மஞ்சுநாதன், தன்னை சகோதரனாக நினைத்து பேசுமாறு கூறி, அந்த இளம்பெண்ணுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். நாளடைவில் அந்த பெண்ணின் முகத்தை பார்த்து பேச வேண்டும் என்பதற்காக மஞ்சுநாதன், அவரது வீட்டிற்கு சென்று கடந்த மார்ச் மாதம் ஒரு ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுத்துள்ளார்.
செல்போனை பெற்றுக்கொண்ட அந்த பெண், செல்போனில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் சகோதரன் போல் பேசி வந்த மஞ்சுநாதன், திடீரென அந்தப்பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு அந்தப்பெண் மறுப்பு தெரிவித்து, இனிமேல் நான் உன்னிடம் பேசமாட்டேன் என்று கூறியதால், ஆத்திரமடைந்த மஞ்சுநாதன் கடந்த ஏப்ரல் மாதத்தில், தான் வாங்கிக்கொடுத்த செல்போனை திரும்பத் தருமாறு கூறியுள்ளார். உடனடியாக அந்தப் பெண்ணும், சிம்கார்டு மற்றும் அதிலிருந்த தகவல்களை அழிக்காமல் செல்போனை திருப்பிக் கொடுத்துவிட்டார்.
சில நாட்களில் அந்த செல்போன் மூலம், அந்த பெண்ணின் முகநூலில் இருந்து, புகைப்படத்தை வைத்து அந்த பெண்ணே ஆண்களை பாலியல் தொழிலுக்கு அழைப்பதாக மஞ்சுநாதன் பதிவேற்றம் செய்துள்ளார். மேலும் அந்த பெண்ணின் புகைப்படத்தை வைத்து பாலியல் தொழிலுக்கு அழைப்பது போல் வாட்ஸ் அப்பிலும் அனுப்பியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த பாதிக்கப்பட்ட பெண், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து தூத்துக்குடி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மஞ்சுநாதனை நேற்று திண்டுகல்லில் கைது செய்தனர்.