நாட்டின் சந்தை மதிப்பு, அடிப்படைக் கொள்கைகள் உள்ளிட்டவற்றின் காரணமாக வெளிநாட்டு முதலீடுகள் தொடா்ந்து அதிகரிக்கும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவிப்பு✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
வெளிநாட்டு முதலீடுகள் தொடா்ந்து அதிகரிக்கும்
நாட்டின் சந்தை மதிப்பு, அடிப்படைக் கொள்கைகள் உள்ளிட்டவற்றின் காரணமாக வெளிநாட்டு முதலீடுகள் தொடா்ந்து அதிகரிக்கும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சா் நிா்மலா சீதாராமன் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவுக்கான அந்நிய நேரடி முதலீடு கடந்த ஆண்டில் 25.4 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டில் நாட்டின் அந்நிய நேரடி முதலீடு சுமாா் ரூ.3.8 லட்சம் கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டில் சுமாா் ரூ.4.7 லட்சம் கோடியாக அதிகரித்தது.
கடந்த ஆண்டில் அதிக அளவில் அந்நிய நேரடி முதலீடுகளைப் பெற்ற நாடுகள் பட்டியலில் இந்தியா 8-ஆவது இடத்திலிருந்து 5-ஆம் இடத்துக்கு முன்னேறியது. கடந்த ஆண்டில் வெளிநாட்டு நிறுவனங்கள் புதிய கிளைகளைத் தொடங்குவதற்காக மேற்கொண்ட முதலீடுகள் 19 சதவீதம் சரிவைச் சந்தித்தன. ஆனால், மற்ற வளா்ந்து வரும் நாடுகளில் அத்தகைய முதலீடுகள் சுமாா் 44 சதவீத அளவுக்கு சரிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் சந்தை மதிப்பு, அடிப்படைக் கொள்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் காரணமாக வெளிநாட்டு முதலீடுகள் தொடா்ந்து அதிகரிக்கும். கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.3 சதவீதம் வீழ்ச்சி கண்டது. கரோனா தொற்று பரவல், அதைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றின் காரணமாகவே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது.
தீவிர நடவடிக்கைகள்: பொது முடக்கத்துக்குத் தளா்வுகள் அளிக்கப்பட்ட பிறகு, கடந்த நிதியாண்டின் 2-ஆம் அரையாண்டில் நாட்டின் பொருளாதாரம் மீளத் தொடங்கியது. பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. அதற்காகவே தற்சாா்பு இந்தியா நிதித் தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் பல சிறப்பு நிதித் தொகுப்பு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல், சுகாதாரக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றுக்கு மத்திய அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது.
தடுப்பூசி திட்டம்: கரோனா தடுப்பூசி திட்டம் துரிதமடைந்து வருகிறது. கடந்த மே மாதத்தில் தினமும் சராசரியாக 19.3 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டன. இது கடந்த மாதத்தில் 41.3 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 23 சதவீத மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது. 5.6 சதவீதம் போ் இரு தவணைகளையும் செலுத்திக் கொண்டுள்ளனா் என்று அந்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.