பன்னீர் சோடாவுக்குள் கிடந்த ஊசி… குடித்த பெண்ணுக்கு நெஞ்சடைப்பு, மயக்கம்!*
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே சின்னவீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னலட்சுமி. நூறு நாள் வேலைப் பணியை முடித்துவிட்டு வந்த களைப்பில் அந்தப் பகுதியிலிருந்த பெட்டிக்கடை ஒன்றில் பன்னீர் சோடா வாங்கிக் குடித்துள்ளார். பன்னீர்சோடாவைக் குடித்துக் கொண்டிருக்கும் போதே நெஞ்சு அடைப்பது போன்ற அறிகுறி தோன்ற, உடனே பாட்டிலைப் பார்த்திருக்கிறார், பாட்டிலுக்குள் மனிதர்களுக்குப் போடக்கூடிய ஊசி கிடந்திருக்கிறது. அதிர்ச்சியடைந்த அன்னலட்சுமி அந்தக் கடைக்காரரிடம் இதுபற்றி விசாரித்துள்ளார். கடைக்காரர் தனக்கு ஏதும் தெரியவில்லை என்று கூற உடனே இதுபற்றி ஆவுடையார்கோவில் போலீஸாரிடம் அன்னலட்சுமி, சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில், அந்தப் பெட்டிக்கடையில் ஆய்வு செய்தனர்.
இதுபற்றி அன்னலட்சுமியிடம் கேட்டபோது,
“வேலைபார்த்துட்டு வந்து ரொம்ப களைப்பா இருந்துச்சு. அதனால தான் பெட்டிக்கடைக்குப் போய் பன்னீர்சோடா வாங்கிக் குடிச்சேன். பாதி குடிக்கும் போதே நெஞ்ச வந்து அடச்சிச்ச மயக்கமா வந்துச்சு. என்னடா நெஞ்ச அடைக்குதே, இன்னும் எவ்வளவு இருக்குன்னு பாட்டில பார்த்தேன். அதுக்குள்ள ஊசி மிதந்துச்சு. அப்ப அந்தக் கடைக்காரவங்களைக் கூப்பிட்டு என்ன ஏதுன்னு கேட்டப்ப அவங்களுக்கு ஏதும் தெரியாதுன்னு சொல்லிட்டாங்க. உடனே, கூல்டிரிங்ஸ் போடுற கம்பெனிக்காரங்ககிட்ட இதுபற்றி கேட்கச் சொன்னேன். அவங்க போனையே எடுக்கலை. அதுக்கப்புறம் தான் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்தோம்.
இப்போ எல்லா இடத்துலயும் கொரோனா பிரச்னையா இருக்கு. பாட்டிலுக்குள் உள்ளே கிடந்தது மனுஷங்களுக்குப் பயன்படுத்திய ஊசி தான். ஊசி கிடந்த அந்த பன்னீர்சோடா செவன் அப் பாட்டிலில் காளீஸ்வரி கம்பெனியின் லேபிள் மறைக்கப்பட்டு, மல்லீஸ்வரி என்ற லேபிள் தான் ஒட்டிருந்துச்சு. பிரபல கம்பெனிகளோட பாட்டில்களை வெச்சு பலரும் போலியா குளிர்பானங்கள் தயாரிக்கிறாங்க. இதுவரை பன்னீர் சோடாவை சாப்பிட்ட எனக்கு உயிருக்கு ஏதும் பிரச்னை இல்லை. இதனால வேறு ஏதாவது பாதிப்பு வந்தாலும், அதுக்கு அந்த நிறுவனம் தான் பொறுப்பு. கவனக்குறைவா நடந்துகிட்ட அந்த கம்பெனிமேல அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்கணும்” என்றார்.
இதுபற்றி உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது,
“மல்லீஸ்வரி என்ற பெயரில் குளிர்பானங்கள் ஆவுடையார்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும்பாலும் கிடைக்கின்றன. இதுபற்றி தகவலறிந்து பெட்டிக்கடையை ஆய்வு செய்ததோடு, அங்கிருந்த குளிர்பான பாட்டில்கள் அனைத்தையும் சோதனை செய்தோம். மற்றவற்றில் எந்த பிரச்னையும் இல்லை. தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு நோட்டீஸ் கொடுத்திருக்கிறோம். அந்த நிறுவனத்திடம் இருந்து பெறப்படும் தகவலைப் பொறுத்து அடுத்தகட்ட நடைமுறைகளைச் செயல்படுத்துவோம். உணவுப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்” என்றனர்.