பண்ணைக்குட்டை அமைக்க விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம்✍️விண்மீன்நியூஸின் வேளாண்மை செய்திகள்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
? செய்திகள் : பண்ணைக்குட்டை அமைக்க விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம்!!
விண்மீன்நியூஸின் வேளாண்மை செய்திகள்..!
பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் பருத்தி, மக்காச்சோளம் மறைமுக ஏலம் விடப்படுகிறது. இதேபோல் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று எள், ஆமணக்கு போன்ற வேளாண் விளைபொருட்களுக்கான மறைமுக ஏலம் நடைபெறுகிறது. ஆகவே பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் தங்களது வேளாண்மை விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் விற்பனை செய்து நல்ல விலை பெறலாம். விவசாயிகள் தங்களிடத்தில் உள்ள வேளாண் விளைபொருட்களை உலர்த்திக்கொள்ள உலர் களம் வசதியும், விளைபொருட்களை வாடகை அடிப்படையில் அதிகபட்சமாக 6 மாதங்கள் வரை இருப்பு வைத்துக்கொள்ள நவீன சேமிப்பு கிட்டங்கி வசதியும் உள்ளது. விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரையிலும், வியாபாரிகளுக்கு ரூ.2 லட்சம் வரையிலும் பொருளீட்டுக்கடன் பெறும் வசதியும் உள்ளது. எனவே ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் வசதிகளை பெரம்பலூர் பகுதி விவசாயிகள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு மேற்பார்வையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் இயற்கை உரங்களான மண்புழு உரம், செறிவூட்டப்பட்ட தொழு உரம், பஞ்சகாவ்யா மற்றும் தசகாவ்யா ஆகியவை விற்பனைக்கு தயாராக உள்ளது. எனவே தேவைப்படும் விவசாயிகள் பண்ணைகளுக்கு நேரில் சென்று வாங்கிக்கொள்ளலாம். இதேபோல் தோட்டக்கலைத்துறையின் மூலம் மண்புழு உரக்கூடாரம் அமைக்க ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தோட்டக்கலை துறையின் மூலம் ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கத்திட்டத்தின் கீழ் பண்ணைக்குட்டை அமைக்க 50 சதவீத மானியத்தில் ரூ.75 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விவசாயிகள் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை, கல்லல் உட்பட மாவட்டம் முழுவதும் பெய்த கனமழை காரணமாக வைக்கோல் பற்றாக்குறை ஏற்பட உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கேரளா, இடுக்கி மாவட்டத்தில் ஏலத்தோட்டங்களில் மிளகு சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தேனி நகராட்சியில் தினமும் 32 டன் குப்பை சேகரமாகிறது. இதில் 18 டன் மக்கும் குப்பை தரம் பிரிக்கப்படுகியது. இதை மினி உரக்கிடங்குகளில் உரமாக்கும் நடவடிக்கை நடக்கிறது. மக்கும் குப்பையை உரமாக்கலில் குப்பையுடன் எபெக்டிவ் மைக்ரோப்ஸ் எனும் பாக்டீரியாவை தவிடு, உமியுடன் கலந்து மக்க வைத்து 42 நாட்களில் இயற்கை உரமாக்குகின்றனர். இந்த உரத்தில் நைட்ரஜன், பாஸ்பேட், பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் உள்ளது. தேனி நகராட்சியில் 200 டன் உரம் தயாரித்துள்ளனர். ஒரு டன் ரூ.1000 வரை விற்கப்படுகிறது. இதுவரை விவசாயிகள் 100 டன் வாங்கி சென்றுள்ளனர் என சுகாதார அலுவலர் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்வதற்கான தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளதால், பிப்ரவரி 5ம் தேதிக்குள் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளார்.