ஹாக்கியில் கலக்கும் கோவில்பட்டி தீப்பெட்டி தொழிலாளரின் மகன் மாரிஸ்வரன்?சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அணி பயிற்சி முகாமிற்கு கோவில்பட்டியை சேர்ந்த மாணவர் தேர்ந்தெடுப்பு?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
ஹாக்கியில் கலக்கும் கோவில்பட்டி தீப்பெட்டி தொழிலாளரின் மகன் மாரிஸ்வரன்
இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கிக்கு பெயர்பெற்ற ஊர்களில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியும் ஒன்று. சுமார் 100 ஆண்டுகளாக ஹாக்கி பயிற்சி அளிக்கப்பட்டு வருவதல், ’ஹாக்கிபட்டி’ எனவும் கோவில்பட்டியை சொல்வார்கள். இந்திய ஹாக்கியின் தந்தை என்று அழைக்கப்படும் ’தயான்சந்த்’ இங்கு வந்து வீரர்களுக்கு பயிற்சி அளித்தாகவும் சொல்லப்படுகிறது. இந்திய அணியிலும், தேசிய ஹாக்கி அணியிலும் கோவில்பட்டியைச் சேர்ந்த பல வீரர்கள் விளையாடியுள்ளனர்.
கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் தற்போதும் கிரிக்கெட்டை விட ஹாக்கியையே பெரும்பாலான இளைஞர்கள் விளையாடி வருகின்றனர். இதற்கென கிராமங்களில் களிமண் ஹாக்கி மைதானங்களும் உள்ளன. ஹாக்கி விளையாட்டானது, செயற்கை புல்வெளி மைதானத்தில் விளையாட ஆரம்பிக்கப்பட்டதற்குப் பிறகு, கோவில்பட்டியிலிருந்து விளையாட்டில் கலந்து கொள்ளும் வீரர்களின் எண்ணிக்கை குறைந்துபோனது.
இதன் பயனாக கோவில்பட்டி நகரம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஹாக்கி வீரர்கள் இங்கு வந்து பயிற்சி பெற ஆரம்பித்தனர். அதில் பயிற்சி பெற்ற மாணவர்களில் ஒருவரான கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரியில் பயிலும் மாணவர் மாரிஸ்வரன் மற்றும் தனியார் கல்லூரியில் பயிலும் அரியலூரைச் சேர்ந்த கார்த்தி ஆகிய இருவரும் ’இந்திய ஜூனியர் அணி தேசிய அளவிலான பயிற்சி முகாமி’ற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் மத்திய அரசின் ’ஹீலோ’ திட்டத்தின் கீழ் நடைபெற்ற தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் தமிழக அணிக்காக இந்த இருவரும் விளையாடினர். அதில், சிறப்பாக விளையாடியதால் தமிழகம் சார்பில் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். இந்தப் பயிற்சி முகாம், வரும் 25-ந்தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 18-ம் தேதி வரை பெங்களூருவில் நடைபெறுகிறது. இதில் சிறப்பாக விளையாடினால் எளிதில் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்பதால் இந்த பயிற்சி முகாம் முக்கியத்துவம் பெறுகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அணி பயிற்சி முகாமிற்கு கோவில்பட்டியை சேர்ந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாரிஸ்வரனிடம் பேசினோம், “ஆறாம் வகுப்பு படித்த போதே ஹாக்கி விளையாட்டின் மீது விருப்பம் ஏற்பட்டது. முதலில் பொழுதுபோக்கிற்காக விளையாட ஆரம்பித்தேன். நாளடைவில் அதே விளையாட்டில் சாதிக்க வேண்டும் என, எனது லட்சியமாகவே மாறி விட்டது. குடும்ப வறுமையால் ஹாக்கி மட்டைகூட வாங்க முடியாத நிலையில் இருந்தேன். சக நண்பர்கள்தான் எனக்கு உதவி செஞ்சாங்க. இந்திய அணிக்காக ஒலிம்பிக், உலகக் கோப்பைகளில் விளையாடி தமிழகத்திற்குச் சிறப்பிடம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே எனது தற்போதைய கனவு” என்றார்.