விவசாய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில்பட்டியில் மாட்டு வண்டியில் வந்து நூதன போராட்டம்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
விவசாய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில்பட்டியில் மாட்டு வண்டியில் வந்து நூதன போராட்டம்
மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம், விவசாய விளை பொருட்கள், வியாபாரம் மற்றும் வர்த்தகம் சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய விவசாய மசோதாவை நிறைவேற்றியது. இந்த புதிய மசோதாவின் காரணமாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று கூறி எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் கோவில்பட்டியில் விவசாய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் தேசிய விவசாயிகள் சங்கத்தினர் மாட்டு வண்டியில் வந்து கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அச்சங்கத்தின் தலைவர் ரெங்கநாயகலு தலைமையில் புதிய விவசாய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை முழங்கினர். தொடர்ந்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.