ஸ்ட்ராபெரி பயிரிடநீலகிரிவிவசாயிகள் திடீர் ஆர்வம்
✍?✅நீலகிரி : கோத்தகிரியில் பெரும்பாலான விவசாயிகள் கொய் மலர் சாகுபடியைக் கைவிட்ட நிலையில் அதற்காக அமைக்கப்பட்ட குடில்களில் ஸ்ட்ராபெரி பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு தேயிலை தொழிலே மிகவும் பிரதானமாக இருந்து வருகிறது. ஆனால், கடந்த பல ஆண்டுகளாகப் பச்சைத் தேயிலைக்கு உரிய கொள்முதல் விலை கிடைக்கவில்லை. இதனால் அவர்களின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து. விவசாயிகளில் பலர் கொய் மலர் சாகுபடி செய்யக் குடில்களை அமைத்து அதில் கொய்மலர், பீன்ஸ், மேரக்காய் போன்ற மலைகாய்கறிகளை சாகுபடி செய்யத் தொடங்கினர். இதில் மலர்கள் வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. காய்கறிகள் உள்ளூர் சந்தையில் விற்கப்பட்டன. இதனால் அவர்களுக்கு நல்ல லாபம் கிடைத்து வந்தது.
காலப் போக்கில் கொய் மலர் சாகுபடியில் தொய்வு ஏற்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. எனவே பெரும்பாலான விவசாயிகள் கொய் மலர் சாகுபடியைக் கைவிட்டு, அதற்காக பெரும் முதலீட்டில் அமைக்கப்பட்ட குடில்களையும் பயன்படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டனர். ஆனால் ஒருசில விவசாயிகள் அதே குடில்களில் ஸ்டாபெரி பழங்களைச் சாகுபடி செய்து அதன் மூலம் கணிசமான லாபம் ஈட்டி வருகின்றனர்.
சொட்டுநீர் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சி, நன்கு பராமரித்து வந்தால் 3 மாதத்துக்குள் ஸ்ட்ராபெரி பழங்கள் அறுவடைக்குத் தயாராகி விடும். பழங்களை ஒருநாள் விட்டு ஒருநாள் அறுவடை செய்யலாம்
இந்த செடிகளில் இருந்து ஆண்டு முழுவதும் பழங்களை அறுவடை செய்ய முடியும் என்பதால் மேலும் ஸ்ட்ராபெரி பழங்கள் கிலோ ஒன்றுக்கு 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை தரத்துக்கு தக்கவாறு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் பல விவசாயிகள் தற்போது ஸ்ட்ராபெரி பழ விவசாயத்திற்கு மாறியுள்ளனர்.