காதல் விவகாரத்தில் இளம்பெண் தற்கொலை? ஆத்திரத்தில் காதலனை 17 முறை கத்தியால் குத்தி இளம்பெண்ணின் தந்தையும், உறவினரும் கொலை செய்தனர்?இதனால் ஆத்திரம் அடைந்த காதலனின் உறவினர்கள் காதலியின் வீட்டிற்கு தீ வைப்பு?
சிக்பள்ளாப்பூர் அருகே, காதல் விவகாரத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட ஆத்திரத்தில் காதலனை 17 முறை கத்தியால் குத்தி இளம்பெண்ணின் தந்தையும், உறவினரும் கொலை செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த காதலனின் உறவினர்களின் காதலியின் வீட்டிற்கு தீ வைத்தனர்.
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபள்ளி தாலுகா யாகவமடலகனே கிராமத்தை சேர்ந்தவர் ஹரீஷ்(வயது 25). இவரும், அதே கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி சந்தித்து வந்தனர். இந்த நிலையில் ஹரீஷ், இளம்பெண்ணின் காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்தது. இவர்களின் காதலுக்கு இளம்பெண்ணின் வீட்டினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ஹரீஷ், இளம்பெண்ணும் வீட்டைவிட்டு வெளியேறினர். மேலும் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர். இந்த நிலையில் ஹரீஷ் தனது மகளை கடத்தி சென்றதாக இளம்பெண்ணின் தந்தை வெங்கடேஷ் பாகேபள்ளி போலீசில் புகார் அளித்து இருந்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் இளம்பெண்ணை மீட்டு வந்தனர். மேலும் போலீஸ் நிலையத்தில் வைத்து நடத்த பேச்சுவார்த்தையின் போது இளம்பெண், தனது தந்தையுடன் செல்வதாக கூறினார். இதையடுத்து இளம்பெண், பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தார். ஆனால் வீட்டிற்கு சென்ற இளம்பெண் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
தனது மகளின் தற்கொலைக்கு ஹரீஷ் தான் காரணம் என்று வெங்கடேஷ் அடிக்கடி கூறி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஹரீஷ் வெளியே சென்று விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது ஹரீசின் மோட்டார் சைக்கிளை வழிமறித்த வெங்கடேஷ், அவரது உறவினர் கணேஷ் ஆகியோர் ஹரீசிடம் தகராறு செய்தனர். மேலும் அவரை பிடித்து சரமாரியாக தாக்கினர்.
மேலும் ஹரீசை, வெங்கடேசும், கணேசும் சேர்ந்து 17 முறை கத்தியால் உடல்முழுவதும் குத்தி உள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த ஹரீஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். இதையடுத்து வெங்கடேசும், கணேசும் தப்பி சென்று விட்டார்கள். இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாகேபள்ளி புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஹரீசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் ஹரீஷ் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் வெங்கடேசின் வீட்டிற்கு சென்று அவரது வீட்டில் இருந்த பொருட்களை வெளியே தூக்கி எறிந்து சூறையாடினர். மேலும் வெங்கடேசின் வீட்டின் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்தனர். இதில் வீடு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், வெங்கடேஷ் வீட்டில் பிடித்த தீயை அணைத்தனர்
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார், பாகேபள்ளி புறநகர் போலீசார் வெங்கடேசின் வீட்டிற்கு சென்று பார்வையிட்டனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த வெங்கடேஷ், கணேசை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் வகையில் யாகவமடலகனே கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.