வாய்மொழியாக பேசும் நரிக்குறவர் மொழிக்கு ஐந்து மொழிகளில்அகராதி உருவாக்கிய சீனிவாச வர்மா
வாய்மொழியாக பேசும் நரிக்குறவர் மொழிக்கு அகராதி உருவாக்கிய சீனுவாச வர்மா!
வாய்மொழியாக மட்டுமே !எழுத்துக்கள் ஏதும் இன்றி, வெறும் வாய்மொழியாக மட்டுமே இருக்கும் நரிக்குறவர்களின் மொழிக்கு, அதுவும் சமூகத்தின் மிகவும் தாழ்ந்த நிலையில் வைக்கப்பட்டு இருக்கும் ஓர் இனத்தின் மொழிக்கு அகராதி தயாரிப்பது என்பது என்ன அவ்வளவு சுலபமான காரியமா? அதுவும் ஐந்து மொழிகளில்?
”இதென்னங்க பெரிய விஷயம். அழிந்துவரும் ஒரு மொழி யைப் பாதுகாப்பது சமூகத் தேவை மட்டுமல்ல; நமது கடமையும் கூட!” என்கிறார் சீனுவாச வர்மா. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறைப் பேராசிரியராக இருந்து பணி நிறைவு பெற்றவர். நரிக்குறவர்களின் மொழியைப் பற்றி எந்தவிதமான குறிப்புகளும் இல்லாத 60-களின் காலகட்டத்தில் அந்த மொழியைப் பயின்று, அதை ஆவணப் படுத்தி முனைவர் பட்டம் பெற்றவர். இவர்தான் தற்போது நரிக்குறவர்களின் மொழிக்கு அகராதியை உருவாக்கியிருக்கிறார்.
”எம்.ஏ. மொழியியல் படித்து முடித்தவுடன் முனைவர் பட்டம் பெறுவதற்கு, எழுத்துருக்கள் இன்றி வாய்மொழியாக மட்டும் இருக்கும் ஒரு மொழியைத் தேர்வு செய்ய நினைத்தேன். நான் தங்கி இருந்த பகுதியில் நரிக்குறவர்கள் அதிகமாக இருந்ததால் அந்த மொழியையே தேர்வு செய்யலாமே என்று முடிவுசெய்தேன். நூலகத்தில் நரிக்குறவர்கள் குறித்து ஒரு தமிழ்ப் புத்தகமும் இல்லை.
‘சரி, புத்தகம் இருந்தால்தான் முடியுமா? அனுபவத்தைவிடச் சிறந்த புத்தகம் எதுவும் இல்லை’ என்று மனதைத் தேற்றிக்கொண்டு, நரிக்குறவர்களிடத்தில் போய் நின்றேன். ‘என்னது… எங்க மொழியை நீங்க கத்துக்கணுமா..? அய்யோ அதெல்லாம் கஷ்டம் சாமீயோவ்’ என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டார்கள். இருந்தாலும் நான் விடவில்லை. அவர்கள் எங்கெல்லாம் சென்றார்களோ அங்கெல்லாம் சென்றேன். அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் டேப் ரெக்கார்டரில் பதிவுசெய்து மீண்டும் மீண்டும் பலமுறை அதை ஒலிக்கவிட்டு, மனதுக்குள் பதித்துக்கொண்டேன். 60-களிலேயே விருத்தாச்சலம் கம்மாபுரம் என்கிற ஊரில் நரிக்குறவர்களுக்கு எனத் தனியாக ஒரு காலனியை அமைத்திருந்தார் பெருந்தலைவர் காமராஜர். அங்கே நரிக்குறவர் குழந்தைகளுக்காக இயங்கிய பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய இலியாஸ் என்பவர், நரிக் குறவர்களின் மொழியைக் கற்பதற்கு உதவி செய்தார்.
ஒலிக்குறிப்புகள், எழுத்துருக்கள் ஆகியவற்றைக் கொண்டு, ஒரு மொழியின் வேர் மொழி எது என்பதை நம்மால் கண்டுபிடித்துவிட முடியும். நரிக்குறவர்கள் பேசும் ‘வாக்ரி’ எனும் மொழியின் வேர் எது என்று தீவிரமாக ஆராய்ந்தபோது, அது குஜராத்தி மொழி என்று கண்டுகொண்டேன். குஜராத்தி மொழியில் ‘வாக்ரி’ என்ற சொல் குருவி பிடிப்பவர்களைக் குறிக்கிறது. ‘போலி’ என்றால் மொழி. ஆகவே ‘வாக்ரிபோலி’. இவர்கள் ஆதிதிராவிடர்/பழங்குடி எனும் பட்டியல் இனத்தில் சேர்க்கப்படாமல் மிகவும் பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் என்ற பிரிவில் வைக்கப்பட்டு இருப்பதால் இவர்களுக்குக் கல்வி முதற்கொண்டு கிடைக்க வேண்டிய பல உரிமைகள் கிடைக்காமல் போகின்றன.
நரிக்குறவர் இனத்தில் உள்ள குஜராத்தி, மேவார், டாபி, சேலியோ எனும் நான்கு பிரிவி பேசும் ஒரே மொழி, வாக்ரிதான். இந்த மொழியை குஜராத்தி மொழியின் எழுத்துருக்களுடனோ அல்லது இந்தி எழுத்துருக்களுடனோ கற்றுக்கொடுக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் அது நடைமுறைச் சாத்தியம் இல்லை.
அதனால் என் துறை நண்பர்கள், சென்னையில் உள்ள தேசிய நாட்டுப்புறவியல் ஆதரவு மையம் எனும் அமைப்பு, நரிக்குறவ இனத்தில் இருந்து படித்த சிலர் ஆகியோரைக் கொண்டு விவாதம் நடத்தியபோது, இந்த மொழிக்கு ஒரு பன்மொழி இலக்கணம் உருவாக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதனாலேயே இந்த அகராதி உருவானது. இந்த அகராதியில், வாக்ரிபோலியின் சொல் முதன்மைச் சொல்லாக ஆங்கில வரிவடிவத்தில் சில குறியீடுகளுடன் கொடுக்கப்பட்டு, அந்தச் சொல்லின் இலக்கணக் குறிப்பும் தரப்பட்டு உள்ளது. அதே சொல் தமிழ் ஒலிபெயர்ப்பு எழுத்து மூலமும், அந்தச்சொல்லுக்கான அர்த்தம் தமிழ் மொழியிலும் கொடுக்கப்பட்டு உள்ளது. அந்தச் சொல்லுக்கு இந்தி எழுத்தில் வடிவம் கொடுக்கப்பட்டு உள்ளது. அதற்கு இணையான குஜராத்தி மொழி வரிவடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இறுதியாக அந்தச் சொல்லுக்கு ஆங்கில மொழி அர்த்தமும் வழங்கப்பட்டு இருக்கிறது.
தாய்மொழியைக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போவதுதான் ஒரு மொழி இறப்பதற்குக் காரணம். ஒரு மொழி அழிந்து போகவிடாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், முதலில் அந்த மொழியை ஆவணப் படுத்த வேண்டும். எங்களைப் போன்ற ஆய்வாளர்கள் வாக்ரி மொழியை ஆவணப்படுத்திவிட்டோம். இனி இதைக் கற்றுக்கொடுக்கும் பணி அரசின் கைகளில்தான் உள்ளது’ என்கிறார் சீனுவாச வர்மா!