கோவில்பட்டி நீர்வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்புகள் 2வது கட்டமாக அகற்றும் பணிகள் தொடக்கம்(12.9.2019)
கோவில்பட்டி நீர்வரத்து ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகள் 2வது கட்டமாக அகற்றும் பணிகள் தொடக்கம்
கோவில்பட்டி செவல்குளம் நீரோடையில் செண்பகவல்லி அம்மன் கோயில் பயன்பாட்டில் 106 கடைகளும், தனியார் ஆக்கிரமிப்பில் 25 கடைகளும் கட்டப்பட்டு இருந்தன. இதில் கடை உரிமையாளர்கள் ஓடையில் கான்கிரீட் தூண்கள் எழுப்பி தங்களது வசதிக்கு தக்கவாறு கடைகளை மாற்றி அமைத்துக் கொண்டதால், மழைக்காலங்களில் மழைநீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இந்தக் கடைகளுக்கு தேங்கும் கழிவு நீரும் மழைக்காலத்தில் வரும் தண்ணீரும் சேர்ந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
கோவில்பட்டி நீர்வரத்து ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த 2010ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. ஆனாலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் கோவில்பட்டி நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பு மீட்புக் குழுவினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து கடந்த 26ம் தேதி முதல் கட்டமாக ஆக்கிரமிப்பில் இருந்த 13 கடைகள் அகற்றும் பணி நடைபெற்றது. இதையடுத்து இரண்டு கட்டமாக இன்று ஆக்கிரமிப்பில் இருந்த 12 கடைகளை அகற்றும் பணி தொடங்கியுள்ளது. கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் மணிகண்டன் மற்றும் வருவாய் துறை, தீயணைப்பு துறை ,மின்வாரிய துறை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் முன்னிலையில் மூன்று ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கோவில்பட்டி டிஎஸ்பி ஜெபராஜ் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் சுதேசன், ஐயப்பன், பத்மாவதி மற்றும் உதவி ஆய்வாளர்கள் போலீசார் என 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
தற்போது கோவில்பட்டியில் சாலை விரிவாக்க பணி நடந்து வருவதால் மீதமுள்ள கடைகளும் இடித்து அப்புறப்படுத்த பட்டால் மட்டுமே சாலைப் பணிகளை விரைவாக முடிக்க முடியும் என்ற நிலையில், விரைவில் நீதிமன்றத்தில் ஆணை பெற்று நீர்வரத்து ஓடையில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும் என வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.