ஆயிரத்தில்ஒருவன் படப்பிடிப்பில்
ஆயிரத்தில் ஒருவன்’ விறுவிறுவென தயாராகிக்கொண்டிருந்தது. கன்னடம், தமிழ் இரண்டிலும் அதுவரை ஜெயலலிதா நடித்த படங்களில் ரொமான்ஸ் கதாநாயகி வேடம் இருந்ததில்லை.
காதல் ரசம் சொட்டும்படி வசனம் எழுதப்பட்டிருந்தாலும், கதாநாயகனுக்கும் கதாநாயகிக்குமான நெருக்கமான காட்சிகள் இருந்ததில்லை.
ஆனால், `ஆயிரத்தில் ஒருவ’னில் சில காட்சிகள் அப்படி அமைக்கப்பட்டிருந்தன. ‘நாணமோ இன்னும் நாணமோ…’ என்ற டூயட் பாடலுக்காக
முதல் இரவுக் காட்சி போன்று செட் அமைத்ததோடு, பூக்களாலேயே நெய்யப்பட்டது போன்ற புதுமையான உடையை ஜெயலலிதாவுக்கு அணிவித்துப் படம்பிடித்தனர்.
அந்தப் பாடல் காட்சியில், கட்டிலில் இருவரும் மிக நெருக்கமாக இருப்பது போன்றும் ஒரு ஷாட் எடுக்கப்பட்டது. காட்சிப்படி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் அருகில் வந்து கட்டியணைக்க ஜெயலலிதாவின் உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது.
வியர்த்துப்போனது முகம். எவ்வளவு முயன்றும் அந்த சங்கடத்தை அவரால் மறைக்க முடியவில்லை. என்னவென்று கேட்டார் எம்.ஜி.ஆர். “ஒன்றும் இல்லை சார்…’’ என உதடுகள் சொன்னாலும்,
உடல் உதறலிலேயே இருந்தது. சினிமாவுக்கு இன்னும் பழகாத சிறு பெண்ணுக்கு ஏற்படும் இயல்பான கூச்சம்தான் அது என்பதை எம்.ஜி.ஆர் புரிந்துகொண்டு பந்துலுவிடம் காட்சியமைப்பை சற்று மாற்றும்படி சொல்லிவிட்டு ஓய்வறைக்குச் சென்றுவிட்டார்.
படப்பிடிப்பில் இந்தச் சம்பவத்தைப் பார்த்துக்கொண்டிருந்த நம்பியார் சிரித்து விட்டார். அவருடன் இருந்த சாண்டோ சின்னப்பா தேவர் பதறிப்போனார். காரணம், அப்போது அவர் எடுக்கவிருந்த ‘கன்னித்தாய்’ படத்துக்கு எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக ஜெயலலிதாவைத்தான் ஒப்பந்தம் செய்திருந்தார்.
‘‘என்னம்மா நீ… லட்சம் லட்சமாகப் பணம் போட்டுப் படம் எடுக்கிறோம். நீ என்னடான்னா பயப்படறியே… எல்லாம் நடிப்புதானே, தைரியமாக நடிக்க வேணாமா… டைம் கிடைச்சா
சின்னவரோட சரோஜாதேவி நடிச்ச படங்களைப் பாரு. அந்தப் பொண்ணு எப்படி ஃப்ரியா ஆக்ட் பண்ணியிருக்குன்னு பார்த்தா உனக்கு பயம் போயிடும்” எனத் தயாரிப்பாளருக்கே உரிய பதற்றத்தோடு அறிவுரை சொன்னார் சின்னப்பா தேவர்.
ஆனால், அதற்கு அவசியமே இல்லாமல் போனது. ‘சினிமா ஒரு தொழில். இங்கு உள் உணர்ச்சிகளுக்கு இடமில்லை’ என்பதை மனதுக்குள் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டார் ஜெயலலிதா.
திட்டமிட்டபடி அதே காட்சி அன்றே எடுக்கப்பட்டது. அம்மா சொல்லிப் புரியாத சினிமா என்ற கனவுத் தொழிற்சாலையின் நெளிவுசுளிவுகள் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தது ஜெயலலிதாவுக்கு.
கறுப்பு வெள்ளைப் படங்களுக்கு மத்தியில், வண்ணப்படமாக வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ சூப்பர் ஹிட் ஆனது. 100 நாள்களைத் தாண்டி ஓடி ஜெயலலிதாவுக்கும் நல்ல பெயரைத் தேடிக்கொடுத்தது.
நடுத்தர வயது தோற்றம்கொண்ட நடிகைகளையே அதுவரை தன் தலைவரின் கதாநாயகிகளாகப் பார்த்துவந்த எம்.ஜி.ஆர் ரசிகர்கள், மிக இளமையான, அசல் கல்லூரிப்பெண் போன்ற துறுதுறுப்பான நாயகியைக் கண்டதும் கொண்டாடித் தீர்த்தனர்.
எம்.ஜி.ஆருடன் நடித்த முதல் படத்திலேயே நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது ஜெயலலிதாவுக்கு. தன்னை இளமையாக வெளிப்படுத்திக்கொள்வதில்,
கதாநாயகிக்குரிய பங்கைப் புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர், அடுத்தடுத்து தன் படங்களில் ஜெயலலிதா இடம்பெற வேண்டும் என மனதுக்குள் முடிவெடுத்துக்கொண்டார்.
எம்.ஜி.ஆரின் திரையுலக வாழ்வில், அவருடன் அதிகப் படங்களில் இணைந்து நடித்த நடிகை என்ற பெயர் ஜெயலலிதாவுக்குக் கிடைத்தது. எட்டு ஆண்டுகளில் அவருடன் நிறையபடங்களில் ஜோடியாக நடித்து முடித்திருந்தார்.
1965-ம் ஆண்டில் மட்டும் ஜெயலலிதா நடிப்பில், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்கள் வெளியாகின. அத்தனையும் வெற்றிப்படங்கள்தான். தெலுங்கில் அவரது முதல் படமான ‘மனுசுலுமமதலு’வும்இந்தப்பட்டியலில்அடக்கம் .✍?????