400 பணியாளர்களை நீக்கும் லோதா குழுமம்!
பொருளாதார மந்தநிலை காரணமாக பல்வேறு துறைகளில் பணியாற்றுபவர்களும் வேலையின்மையைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பெரிய பெரிய நிறுவனங்களும் தங்களது வேலையாட்களைக் குறைத்து வருவதாகத் தினம் தோறும் செய்திகள் வெளியாகின்றன. ஆட்டோ மொபைல் உள்ளிட்ட துறைகளில் பாதிப்பு ஏற்பட்ட சூழலில் தற்போது பொருளாதார மந்த நிலை காரணமாக ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் வீழ்ச்சியைச் சந்தித்து வருவதாக ரியல் எஸ்டேட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் குழுமமான லோதா தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் 400 ஊழியர்களுக்கு பிங்க் சிலிப் (பணிநீக்க அறிவிப்பைக்குறிக்கும்) கொடுத்திருக்கிறது. இதன் மூலம் 400 பணியாளர்களை லோதா நிறுவனம் பணி நீக்கம் செய்யவிருப்பதாக அந்நிறுவன செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். லோதா குழுமத்துக்கு ஏற்பட்ட கடன் சுமை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
மும்பை பாஜக தலைவர் மங்கல் பிரபாத் லோதா நிறுவிய இந்நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளில் 5 சதவிகித அளவுக்கு பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது.
மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் மற்றும் பிட்ச் ரேட்டிங்ஸ் ஆகிய சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனங்களின் கணிப்பில், மெக்ரோடெக் டெவலப்பர்ஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட லோதா குழுமத்தின் கடன் 13 சதவிகிதம் உயர்ந்து தற்போது ரூ .25,640 கோடியாக உள்ளது என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தனது குழுமத்திலிருந்து பணியாளர்களை நீக்க லோதா முடிவு செய்து 400 பணியாளர்களுக்கு பிங்க் சிலிப் கொடுத்திருக்கிறது.
இந்தப் பணி நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் பொறியாளர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உட்பட பல்வேறு துறைகளில் ஜூனியர் மற்றும் இடைநிலையில் உள்ள ஊழியர்கள் தான் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
”எங்கள் நிறுவனத்தின் மூலம் நாடு முழுதும் 50,000 பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை கிடைக்கிறது. இந்த பணி நீக்கம் வருடாந்திர பணியாளர் மதிப்பீட்டின் அடிப்படையில் செய்யப்பட்டது என அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
தற்போது லோதா நிறுவனத்தின் கீழ் வோர்ல்ட் டவர்ஸ், லோதா பார்க் உட்பட 42 கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பாலவா சிட்டி போன்ற மலிவு வீடு கட்டும் திட்டங்களும் அடங்கும்.????????????