தமிழ்நாட்டில் திமுகவும் பாஜகாவும் இரண்டு உடல், ஒரு தலை போன்றது என்றும், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா சுடுகாடாகிவிடும் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் மானூரில் அரசு கலை கல்லூரி கட்டுவதற்கு முதலில் இடம்
தேர்வு செய்யப்பட்டு அடிப்படை கட்டுமான பணிகள் நடைபெற்ற இடத்தை நாம்
தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழ்நாடு அரசு கையால் ஆகாத அரசாக
இருப்பதாக தனியார் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு ஆதரவாக அரசு செயல்பட்டு வருவதாகவும் விமர்சனம் செய்தார்.
மானூரில் பணிகள் தொடங்கிய இடத்தை விட்டு மாற்று இடத்தில் கல்லூரி கட்டுவதற்கு நாம் தமிழர் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என்று தெரிவித்தவர் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும் கூறினார். தொடர்ந்து அரசியல் ரீதியிலான கேள்விகளுக்கு பதிலளித்த அவர் செந்தில் பாலாஜிக்கு நடைபெறும் அறுவை சிகிச்சையை நேரலை செய்தால்தான் உண்மையிலேயே என்ன நடக்கிறது என்று தெரியும் என்றும் உடல் நலத்தை காரணம் காட்டி அவருக்கு புனிதர் பட்டம் கொடுத்து விடுவார்கள் என்றும் விமர்சனம் செய்தார்.
2024 இல் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து எழுப்பிய கேள்விக்கு ஒரே இரவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்த பிரதமர் மோடி மே மாதம் அல்லது வரக்கூடிய டிசம்பர் மாதத்திலேயே நாடாளுமன்ற தேர்தலை நடத்தலாம் என்றும் அவர் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் தேர்தலை
நடத்துவார் என்றும் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் கட்சியின் 10 ஆண்டு ஊழல் ஆட்சியால்தான் பாஜக ஆட்சிக்கு வந்தது என்றும் மோடியை வீழ்த்த மாநில கட்சிகள் வலுப்பெற வேண்டும் என்று தெரிவித்த அவர், தேர்தலுக்குப் பிறகு கூட்டாட்சி நடத்தும் விதமாக பேச்சுவார்த்தை மூலம் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சியின் தலைவரை பிரதமராக தேர்ந்தெடுக்கலாம் என்றும் தெரிவித்தார். அதை விடுத்து பொது வேட்பாளராக மோடிக்கு எதிராக ராகுல் காந்தியை நிறுத்தினால் அவர் ஊதி தள்ளி விடுவார் என்றும் தெரிவித்தார்.
ஒரு பட்டனை அழுத்தினால் குண்டு விழும் என்று ரஷ்யாவும் சீனாவும் கூறிக் கொள்வது போன்று ஒரே பட்டனை அழுத்தினால் பாஜகவிற்கு வாக்குகள் விழும் வகையில் ஏற்பாடுகளை மோடி செய்வார் என்றும் விமர்சனம் செய்தார். பணம் கொடுப்பவர்கள் பத்து ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை விதிக்கும் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். தேர்தல் ஆணையத்திடம் நேர்மை இல்லை என்றும் விமர்சனம் செய்தார்.
நடிகர் விஜய் தொடர்பான அரசியல் கேள்விக்கு பதில் அளித்த சீமான், நன்மை செய்யும் நோக்கில் அவர் அரசியலுக்கு வந்தால் தவறில்லை என்றும் அதை வரவேற்பதாகவும் தெரிவித்தார். நடிகர் விஜயின் ஆதரவு கேட்பீர்களா என்று கேள்விக்கு நடிகர் விஜயின் உதவி தனக்கு தேவையில்லை என்று தெரிவித்தார். அத்துடன் தற்போது இந்தியாவில் அதிகமாக திரைப்படத்திற்கு சம்பளம் பெறும் நடிகர் விஜய் தான் என்றும் தமிழ்நாட்டில்
அதிகமான ரசிகர்கள் இருப்பதும் அவருக்குத்தான் என்றும் அவர்தான் உண்மையான
சூப்பர் ஸ்டார் என்றும் தெரிவித்தார்.
மணிப்பூர் மாநிலமே தற்போது தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதாகவும், பிரித்தாலும் கொள்கையை பாஜக மேற்கொண்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் மக்களை பிளவுபடுத்தி வேலை செய்வதுதான் பாஜகவின் வேலை என்றும் விமர்சனம் செய்தார். மக்களுக்கு நன்மை செய்வோம் என்று கூறிக் கொள்ளும் பாஜக பிணத்தின் மீது மேடை போட்டு பேசுவார்கள் என்றும், காட்டமாக விமர்சனம் செய்ததுடன் பாஜகவும் திமுகவும் ஈருடல் ஒருதலை போன்றது என்றும் விமர்சனம் செய்தார்.