என்னதான் செய்யும் எனப் பார்த்துவிடலாம்’ என்ற எண்ணத்தில் புலியின் வாலைக் குச்சியால் தட்டிய விவசாயி✍️ கடித்து குதறிய புலி,உயிரிழந்த விவசாயி✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
போபால்: புலியின் வாலைக் குச்சியால் தட்டிய விவசாயியின் உயிர்போனது.
‘என்னதான் செய்யும் எனப் பார்த்துவிடலாம்’ என்ற எண்ணத்தில் ஒரு குச்சியால் புலியின் வாலைச் சீண்டினார் சந்தோஷ், 35, என்ற இந்த ஆடவர்.
திடீரெனத் திரும்பி அவர்மீது பாய்ந்த புலி, அவரது கழுத்தின் பின்பகுதியைக் கடித்ததில் ஆழமான காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டியது.
அதனைத் தொடர்ந்து, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சந்தோஷ் சிகிச்சை பலனின்றி இறந்துபோனார்.
மகாராஷ்டிர மாநிலம், ஜல்கான் மாவட்டத்தில் உள்ள யவல் வனவிலங்கு சரணாலயத்தைச் சேர்ந்த அப்புலி, மத்திய பிரதேச மாநிலம், கர்கோன் மாவட்டத்தில் சிரியா காட்டுப்பகுதியில் சுற்றித் திரிந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
கொழுத்த இரைக்குப் பிறகு அம்பா டோச்சர் பகுதிக்குள் நுழைந்து, அப்புலி ஓய்வெடுத்துக்க்கொண்டிருந்ததாகவும் அதனைக் காணத் திரண்ட கிராமவாசிகள் அதனைச் சீண்டியதாகவும் வனத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
அக்கூட்டத்திடம் இருந்து விடபட முயன்ற புலி, வனக்காவலர் ஒருவரையும் தாக்கியது. குச்சியால் அதனை விரட்டிய அக்காவலர், மரத்திலேறி, அதனிடமிருந்து தப்பியதாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி தெரிவித்தது.
அதன்பின் 10-12 கி.மீ. தொலைவு ஓடிய அப்புலி, குஷியாலா எனும் கிராமத்திற்குள் புகுந்தது. மேலும் பலருடன் சேர்ந்து பல மணி நேரமாக அதனைப் பின்தொடர்ந்த சந்தோஷ், பின்னர் குச்சியால் அதன் வாலைச் சீண்ட, அது அவரது உயிருக்கே எமனாக அமைந்துவிட்டது என்று வனத்துறையினர் விவரித்தனர்.
விதிமுறைகளின்படி, சந்தோஷின் குடும்பத்திற்கு ரூ.800,000 இழப்பீடு வழங்கப்படும் என்று வனத்துறை தெரிவித்தது.
தப்பியோடிய புலி எங்கிருக்கிறது என்பது தெரியவில்லை.
இந்நிலையில், புலி தென்பட்டால் அதனிடம் நெருங்க வேண்டாம் என்று பொதுமக்களை வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.