வக்கீல் வெட்டிக் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வலியுறுத்தியும்✍️தூத்துக்குடி கோர்ட்டு முன்பு வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டம்✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்
வக்கீல் வெட்டிக் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வலியுறுத்தியும் வக்கீல்கள் நேற்று தூத்துக்குடி கோர்ட்டு முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
வக்கீல்
தூத்துக்குடி அருகே உள்ள சோரீஸ்புரம் 2-வது தெருவைச் சேர்ந்தவர் பிச்சைக்கண்ணன். இவருடைய மகன் முத்துக்குமார் (வயது 45). வக்கீல். இவர் கடந்த 23-ந் தேதி சோரீஸ்புரத்தில் உள்ள தனது அடகு கடைக்கு சென்ற போது வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த வேல்முருகன் (25), ராஜரத்தினம் (25), இலங்கேசுவரன் (30), முத்துராஜ், ரமேஷ் ஆகிய 5 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இவர்களில் வேல்முருகன், ராஜரத்தினம், இலங்கேசுவரன் ஆகிய 3 பேரையும் சிப்காட் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ரமேசையும் போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
உண்ணாவிரதம்
இந்த நிலையில் வக்கீல் முத்துக்குமாரை கொலை செய்த கொலையாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தூத்துக்குடி வக்கீல்கள் காலவரையற்ற கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கொலை வழக்கில் முறையாக விசாரித்து கொலையாளிகள் அனைவரையும் விரைந்து கைது செய்ய வேண்டும், வக்கீல்கள் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று கோர்ட்டு முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு வக்கீல் சங்க தலைவர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார். செயலாளர் மார்க்ஸ் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் துணைத்தலைவர் செல்வின், வக்கீல் யு.எஸ்.சேகர், சுரேஷ்குமார், வாரியார் மற்றும் திரளான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.