சென்னை மாடம்பாக்கத்தில் ,நான்கு மாத குழந்தையை கொன்று புதைத்த கொடூர தந்தை கைது: எலும்புக்கூடுகளை தோண்டி எடுத்து பரிசோதனை✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
வண்டலூர்:செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் வருண் (20). இவரும் மீனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி (20). என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் விஜயலட்சுமி கர்ப்பம் ஆனதால் வருண் தனது வீட்டிற்கு தெரியாமல் விஜயலட்சுமியை திருமணம் செய்து மாடம்பாக்கம் பகுதியில் குடியமர்த்தி வைத்தார். இவர்களுக்கு கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுவரை வீட்டிற்கு தெரியாமல் இருந்து வந்த நிலையில் விஜயலட்சுமி வருணின் வீட்டிற்கு தன்னையும், குழந்தையையும் அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து வருண் பெற்றோரிடம் தனக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும், 4 மாதத்தில் ஆண் குழந்தை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் வருணிடம், விஜயலட்சுமியையும் குழந்தையையும் எங்கேயாவது விட்டுவிட்டு வருமாறு கூறியுள்ளனர். இதனால் விஜயலட்சுமியிடம் இருந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு குழந்தையை வாங்கிய வருண், தனது நண்பருக்கு குழந்தை இல்லாததால் அவரது வீட்டில் குழந்தை வளரட்டும் என கூறியுள்ளார். ஆனால், குழந்தையை கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டு நல்லூர் சுடுகாட்டிற்கு எடுத்து வந்த வருண், குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்று புதைந்துள்ளார். நீண்ட நாட்களாக குழந்தையை பார்க்க வேண்டும் என விஜயலட்சுமி கூறிய நிலையில் வருணின் நண்பர் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். ஆனால் அங்கு குழந்தை இல்லாததால் சந்தேகமடைந்த விஜயலட்சுமி மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து வருணை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் குழந்தையை கொன்று புதைத்தது தெரிய வந்தது. தொடர்ந்து பெருமாட்டு நல்லூர் சுடுகாடு அருகே புதைக்கப்பட்டிருந்த குழந்தையின் எலும்புக் கூடுகளை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.