கம்பாலா: உகாண்டாவில் 67 வயதான ஒருவருக்கு, 12 மனைவிகள், 102 குழந்தைகள், 568 பேரக்குழந்தைகள், செலவுகள் அதிகரித்து வருவதால் ,போதுமடா சாமி இனியும் குழந்தை வேண்டாம் என முடிவு செய்துள்ள அந்நபர், அனைத்து மனைவிகளிடமும் குடும்ப கட்டுப்பாடு செய்ய வலியுறுத்தல்
கம்பாலா: உகாண்டாவில் 67 வயதான ஒருவர், 12 மனைவிகள், 102 குழந்தைகள், 568 பேரக்குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். செலவுகள் அதிகரித்து வருவதால் இனியும் குழந்தை வேண்டாம் என முடிவு செய்துள்ள அந்நபர், அனைத்து மனைவிகளிடமும் குடும்ப கட்டுப்பாடு செய்ய வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய காலகட்டத்தில் திருமணம் நடப்பதே குதிரைக்கொம்பாக இருக்கிறது. அப்படி இருக்கையில் உகாண்டா நாட்டில் ஒருவர் 12 மனைவிகளுடன் வாழ்ந்து வருவதுடன் அவர்கள் மூலமாக 102 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். அது மட்டுமல்ல அவருக்கு 568 பேரக்குழந்தைகளும் உள்ளனராம். நம்ப முடியவில்லையா?
ஆம், உகாண்டா நாட்டை சேர்ந்த மூசா ஹசாயா என்பவர் தான் இவ்வளவு பெரிய குடும்பத்தின் தலைவர். 67 வயதான இவர், தனது 16வது வயதில் 1971ல் பள்ளிப்படிப்பை முடித்த உடன் திருமணம் செய்திருக்கிறார்.
வசதிப்படைத்தவராக இருந்த மூசா, கிராமத் தலைவராகவும் இருந்து, ஒருபக்கம் தொழிலையும் கவனித்து வந்துள்ளார். தனது சொத்துகள் மற்றும் குடும்பத்தை விரிவுப்படுத்தும் நோக்கில் அடுத்தடுத்து திருமணங்களை செய்துள்ளார்.
இப்படியாக 12 திருமணங்களை செய்த மூசா, அவர்கள் மூலம் 102 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். அந்த குழந்தைகள் மூலமாக 568 பேரக்குழந்தைகளுக்கும் தாத்தா ஆனார்.
இதில் பலரின் பெயர்கள் கூட மூசாவிற்கு நினைவில் இல்லையாம். அந்த அளவிற்கு அவர் எதிர்பார்க்காத அளவிற்கு குடும்பம் ‛பெரியதாக’ விரிவாகியுள்ளது.
12 மனைவிகளும் ஒரே வீட்டில் தான் வசித்துள்ளனர். அவருடைய மூத்த மகனுக்கும், தனது கடைசி மனைவிக்குமான வயது வித்தியாசமே 21 ஆண்டுகள். அடேங்கப்பா.. என ஆச்சரியப்படலாமா அல்லது வருத்தப்படலாமா என எண்ணிக்கொண்டிருந்த மூசா, தற்போது துணிச்சலான முடிவை எடுத்துள்ளார்.
தனது 12 மனைவிகளையும் கருத்தடை மாத்திரை எடுத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து மூசா கூறியதாவது:
முதன்முதலில் நான் மறுமணம் பற்றி யோசித்தது, என் குடும்பத்தை பெருக்குவதற்காகத்தான். எனக்கு என் குடும்பத்தை விரிவுப்படுத்த வேண்டும் என்று மட்டுமே தோன்றியது.
என் குடும்பத்தில் எல்லோரையும் நான் சமமாகவே நடத்தினேன். யாரையும் துன்புறுத்தியத்தில்லை. தற்போது என்னால் இதற்குமேல் ஒரு குழந்தையை கவனித்துக்கொள்ள முடியாது. அந்த அளவிற்கு செலவுகள் அதிகரித்து வருவதால் எனது சேமிப்பும், வருமானமும் பல ஆண்டுகளாக குறைந்து வருகிறது.
இதனால், என்னுடைய எல்லா மனைவிகளையும் குடும்பக் கட்டுப்பாடு செய்ய சொல்லி அறிவுறுத்திவிட்டேன். கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன். இனி குழந்தையை சுமக்க வேண்டாமென சொல்லியிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.