ஈரோட்டில் மொபைல் ஷோரூமில் கைவரிசை காட்டிய நபர் ஒரேநாளில் கைது! – சாக்குப்பையில் விலையுயர்ந்த ஐபோன்கள், ஆண்டிராய்டு போன்கள், லேப்டாப் மற்றும் கடைக்காரர்கள் சொந்த உபயோகத்துக்காக பயன்படுத்திய செல்போனையும் திருடி ஓடிய நபரால் பரபரப்பு✍️ திருடிச் சென்ற காட்சிகளை காட்டி கொடுத்தது செல்போன் சிக்னல்✍️
ஈரோடு, மேட்டூர் ரோட்டிலிருக்கும் செல்போன் ஷோரூமின் பங்குதாரர்கள் கோவையைச் சேர்ந்த தரணிதரன், ஈரோட்டைச் சேர்ந்த பூபதி. இந்த ஷோரூமை கவனித்து வரும் கௌதம், கார்த்திக் ஆகிய இருவரும் 6-ம் தேதி இரவு ஷோரூமை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டனர். மறுநாள் அதிகாலையில் செல்போன் ஷோரூமுக்கு முன்புறம் படுத்திருந்த அழுக்கு லுங்கி அணிந்திருந்த ஒரு மர்ம நபர், கடையின் ஷட்டரை கம்பியால் நெம்பி லாக்கை உடைத்து, உள்ளே புகுந்து சத்தமின்றி தன்னுடன் கொண்டு சென்றிருந்த சாக்குப்பையில் விலையுயர்ந்த ஐபோன்கள், ஆண்டிராய்டு போன்கள், லேப்டாப் போன்றவற்றை போட்டு திருடிச் சென்றார். மேலும், கடைக்காரர்கள் சொந்த உபயோகத்துக்காக பயன்படுத்திய செல்போனையும் அந்த நபர் திருடிச் சென்றார். அங்கு திருடிச் சென்ற காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.
இதையடுத்து நிகழ்விடத்தில் டவுன் டி.எஸ்.பி ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் தெய்வராணி உள்ளிட்ட போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஷோரூமிலிருந்து ரூ.13.20 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் திருட்டு போனது தெரியவந்தது.
இந்த நிலையில், ஷோரூமிலிருந்து திருடிச் செல்லப்பட்ட பழைய செல்போன் எண் எந்த செல்போன் டவரின் தொடர்பிலிருக்கிறது என்பதை ஆராய்ந்தபோது, ஈரோடு ரயில் நிலையத்தின் சிக்னலை காட்டியது. இதையடுத்து அங்கு விரைந்த போலீஸார் அந்த நபரை சுற்றி வளைத்தனர். அவர் வைத்திருந்த சாக்குப்பையில், ஷோரூமிலிருந்து காலையில் திருடிச் சென்ற செல்போன்கள் இருந்தன. அதையடுத்து, அந்த நபரை போலீஸார் கைதுசெய்தனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய போலீஸார், “பிடிபட்ட நபர் கன்னியாகுமரி மாவட்டம், சாந்தபுரத்தைச் சேர்ந்த விஜயகுமார் (42). நாடோடியாக சுற்றித் திரியும் இந்த நபர் பழைய குற்றவாளி. பகலில் குப்பை பொறுக்கும் தொழிலில் ஈடுபட்டு திருடுவதற்கு சாதகமான கடைகளை நோட்டமிடுவார். அந்த வகையில், அந்த செல்போன் ஷோரூமில் திருட முதலிலேயே திட்டமிட்டு செல்போன்களை கொள்ளையடித்துச் சென்றுவிட்டார்.
இந்த செல்போன்களின் உண்மையான மதிப்பு அவருக்குத் தெரியாது. குடிக்கு அடிமை என்பதால் ரூ.1,000, 500 என கிடைக்கும் விலைக்கு விற்று விடுவார். சில செல்போன்களை, செல்போன் ரிப்பேர் செய்யும் கடைகளில் கொடுத்து அவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்வார். புதிய செல்போன்கள் என்பதால் ஐ.எம்.இ.ஐ எண்ணைக் கொண்டு செல்போன் இருக்கும் இடத்தை அறிந்துக் கொள்ள முடியும். எனவே செல்போன் ரிப்பேர் செய்யும் நபர்கள் அவர்களிடம் உள்ள சாஃப்ட்வேர் மூலம் ஐ.எம்.இ.ஐ எண்ணைக்கூட மாற்றி அதனை நல்ல விலைக்கு விற்று விடுவார்கள். தற்போது பிடிபட்ட விஜயகுமாரிடமிருந்து 34 செல்போன்களும், ரூ.5,000 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதுசெய்யப்பட்ட விஜயகுமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஈரோடு கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்” என்று தெரிவித்தனர்.