தமிழகத்தில் சிறுநீரகத்திற்காக 6,483; ஈரலுக்காக 380; இருதயத்திற்காக 43 பேர்; நுரையீரலுக்காக 42 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்,” என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவிப்பு?முழுவிவரம்?விண்மீன்நியூஸ்
சிறுநீரகத்திற்காக 6,483 பேர் காத்திருப்பு: அமைச்சர் தகவல்
கோவை : ”தமிழகத்தில் சிறுநீரகத்திற்காக 6,483; ஈரலுக்காக 380; இருதயத்திற்காக 43 பேர்; நுரையீரலுக்காக 42 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்,” என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
கோவை அரசு மருத்துவமனையில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.இதில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட கலெக்டர் சமீரன், மருத்துவமனையின் ‘டீன்’ நிர்மலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின், அமைச்சர் சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், 2008ம் ஆண்டு உறுப்பு மாற்று ஆணையம் உருவாக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு, 1,524 கொடையாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். அதில், மொத்த உறுப்புகளின் பயன்பாடு 5,557 ஆக உள்ளது.குறிப்பாக, இதய மாற்று சிகிச்சைக்காக, 711 பேர், நுரையீரல், 676; கல்லீரல், 1,404; கணையம், 33; சிறுகுடல், 5; வயிறு, 1; கைகள், 4 என, 1,524 மூளைச் சாவு அடைந்தவர்களின் உறுப்புகள் கிடைக்கப் பெற்று பயன்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஏப்., 22 முதல் இன்று வரை, 13 கொடையாளர்கள், 50 உறுப்புகளை தானம் செய்துள்ளனர். 2021 மே முதல், கடந்த ஜூலை வரை உறுப்பு கொடையாளர்கள், 114 பேராக உள்ளனர்.சிறுநீரகத்திற்காக விண்ணப்பித்து, 6,483 பேர்; ஈரல், 380; இதயம், 43; நுரையீரல், 42; இருதயம் மற்றும் நுரையீரல், 18, கணையம், 2, கைகள், 23 பேர் என, உறுப்புகளுக்கான காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.’பூஸ்டர்’ தடுப்பூசி, 3.5 கோடி பேருக்கு போடும் நிலை உள்ளது. முதல் டோஸ், 95.63 சதவீதமும், இரண்டாம் டோஸ், 88.62 சதவீதமும், பூஸ்டர் டோஸ், 37 லட்சத்து 33 ஆயிரத்து 957 பேரும் செலுத்தியுள்ளனர்.
வரும் 7ம் தேதி தமிழகத்தில், 50 ஆயிரம் இடங்களில், 33வது மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. கோவை அரசு மருத்துவமனையில் கூடுதல் உபகரணங்கள் வாங்க, 36.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை குரங்கம்மை பாதிப்பு இல்லை.நோய் தடுப்பு நடவடிக்கைகளாக விமான நிலையம், தமிழக எல்லை பகுதிகளில் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.