அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையில்லை: உச்சநீதிமன்றம்*
ஜூலை 11 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படாத புதிய தீா்மானங்களை நிறைவேற்றுவதற்கு சென்னை உயா்நீதிமன்றம் தடை விதித்தது.
இந்த உத்தரவை எதிா்த்து தமிழக முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணைஉச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.
நீதிபதிகள் இந்திரா பானா்ஜி, ஜே.கே. மகேஸ்வரி ஆகியோா் அடங்கிய அமர்வு விசாரித்த நிலையில்,ஜூலை 11 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, அதிமுக உள்கட்சி விவகாரத்தில் நாங்கள் எப்படி தலையிட முடியும்? சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற ஒரு நபர் அமர்வு தான் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும்.
அதிமுக உட்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. பொதுக்குழு தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்போவதுமில்லை என்று கூறிய நீதிபதிகள்,இரு தரப்பினரும் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.