தூத்துக்குடி மாவட்டத்தில் சிகரெட் வடிவ மிட்டாய் விற்றால் கடை மூடப்படும் என்று மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் எச்சரிக்கை✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
தூத்துக்குடியில் சிகரெட் வடிவ மிட்டாய் விற்றால் கடை மூடப்படும்: உணவு பாதுகாப்பு அலுவலர்*
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் சிகரெட் வடிவ மிட்டாய் விற்றால் கடை மூடப்படும் என்று மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சிகரெட் மிட்டாய்
தூத்துக்குடி மாவட்டத்தில், சமீபத்தில் ஊசி போடும் சிரிஞ்சில் சாக்லேட் நிரப்பி விற்பதாக தகவல்கள் வெளியானது. இதனால் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்களான, சக்திமுருகன், காளிமுத்து, ஜோதிபாஸூ, சிவக்குமார் மற்றும் மாரியப்பன் ஆகியோர் ஒரே நேரத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஊசி போடும் சிரிஞ்சில் நிரப்பப்பட்ட சாக்லேட் எதுவும் கண்டறியப்படவில்லை. ஆனால், சிறுவயதிலேயே புகைப்பிடித்தலை மனதில் விதைக்கும் விதமாக, சிறுவர்களை கவர்வதற்கு சிகரெட் வடிவில் மிட்டாய்கள் விற்கப்படுவது கண்டறியப்பட்டது. உடனடியாக அந்த மிட்டாய்கள் பறிமுதல் செய்யப்பட்டு, உணவு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டது. அதனை தயாரித்த நிறுவனங்களில் ஒன்று மதுரையில் அமைந்துள்ளதால், அம்மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, தயாரிப்பு நிறுவனத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மற்றொரு நிறுவனம் மும்பையில் உள்ளதாக தெரியவந்து உள்ளது. சம்பந்தப்பட்ட மாவட்ட உணவு பாதுகாப்புத் துறைக்கு உரிய நடவடிக்கைக்குப் பரிந்துரை கடிதம் அனுப்பப்படும்.
கடை மூடல்
தூத்துக்குடி மாவட்டத்தில் எந்தவொரு வியாபாரியும், ஊசி்போடும் சிரிஞ்சில் சாக்லேட் நிரப்பி விற்றாலோ அல்லது சிகரெட் வடிவ மிட்டாய் விற்றாலோ அவர்களது கடை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மூடப்படும். மேலும் பொதுமக்கள், குறிப்பாக பள்ளி ஆசிரியர்கள் இந்த மாதிரியான வித்தியாசமான வகையில் சாக்லேட் அல்லது மிட்டாய் வகைகளின் விற்பனையை கண்டறிய நேரிட்டால், 94440 42322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தகவல் தெரிவிப்பவரது விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.