அதிரடியாக அவசரமாக நாட்டிலுள்ள அனைத்து ,வெள்ளெலிகளைக் கொல்லுங்கள்!” என உத்தரவிட்ட சீனதேசம்✍️கோவிட் 19 காரணமாக கோவத்துடன் உத்தரவிட்ட சீனா✍️விண்மீன் நியூஸ்✍️
வெள்ளெலிகளைக் கொல்லுங்கள்!” – கோவிட் 19 காரணமாக அதிரடி உத்தரவிட்ட சீனா
சீனாவிலுள்ள ஹாங்காங்கின் சுகாதாரத்துறை அமைச்சரான சோபியா சான் சியூ, கோவிட் கட்டுப்பாடு தொடர்பாக சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ஹாங்காங் நகரில் உள்ள அனைத்து வெள்ளெலிகளையும் (Hamster) கொல்லும்படி உத்தரவிட்டிருந்தார். இந்தத் திடீர் முடிவுக்கு, `கோவிட்-19 தொற்று வெள்ளெலிகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம்’ என்ற கணிப்பே காரணமாகச் சொல்லப்படுகிறது.
கடந்த வாரம் வெள்ளெலிகளை விற்கும் ஒரு கடையில் வேலை பார்த்த ஒருவருக்கும், அங்கு வெள்ளெலிகளை வாங்கிச் சென்ற வாடிக்கையாளர் இருவருக்கும் கோவிட்-19 தொற்று ஏற்பட்டது. அந்தக் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த வெள்ளெலிகளுக்கும் கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதைத் தொடர்ந்து மேலும் தொற்று பரவுவதைத் தடுக்க ஹாங்காங் நகரில் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட வெள்ளெலிகளைக் கொல்லும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, டிசம்பர் 22-ம் தேதிக்கு மேல் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளெலிகளைக் கொல்ல உத்தரவிட்டுள்ளது. மேலும், வெள்ளெலிகளை விற்பனை செய்யும் 35-க்கும் மேற்பட்ட கடைகளுக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளெலிகள் அனைத்தும் நெதர்லாந்திலிருந்து இறக்குதி செய்யப்பட்டவை. சுகாதாரத் துறையின் இந்த முடிவுக்கு வெள்ளெலி வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்தப் பிரச்னை குறித்து வெள்ளெலிகள் விற்பனையாளர் லூயிஸ் யியங் கூறுகையில், “எங்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டாலும் நாங்கள் அரசிடமிருந்து நிவாரணம் எதையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், இந்தப் பிராணிகளைப் பராமரிப்பதில் செலுத்தும் நேரமும் அன்பும் விலை மதிக்க முடியாதவை” என்கிறார்.
வெள்ளெலி விற்போர் சங்கத்தின் துணைத்தலைவரான ஏஞ்சலா சான் கூறுகையில், “அரசின் இந்த முடிவு எங்கள் வியாபாரத்தை மிகவும் பாதிக்கும். அதுமட்டுமல்லாமல் இனி மக்களிடம் வெள்ளெலிகளை வாங்கும் ஆர்வம் குறையும். அவற்றின் இறக்குமதியையும் தடை செய்திருப்பதால் எங்களுக்கு பலத்த நஷ்டம் ஏற்படும்” என்கிறார்.
சீன அரசின் முடிவு குறித்து ஹாங்காங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நுண்ணுயிரி ஆய்வாளர் யுயன் க்வோக் யுங் கூறுகையில், “கொரோனா வைரஸ் கிருமி மனிதர்களிடமிருந்து வெள்ளெலிகளுக்குப் பரவி இருக்கலாம் அல்லது அவற்றுக்கு ஏற்கெனவே தொற்று பாதிப்பு இருந்திருக்கலாம். மீண்டும் அவற்றிடமிருந்து மனிதர்களுக்குப் பரவ சாத்தியம் உள்ளது. தொற்று பரவாமல் தடுப்பதற்கு விரைவான முடிவு நிச்சயம் தேவை. இது கடினமான ஒரு சூழல்தான். வெள்ளெலிகளை வளர்ப்பவர்கள் மற்றும் அவற்றை விற்போரின் நிலையைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், தற்போது வேறு வழி இல்லை” என்கிறார்.