நகைச்சுவை நிகழ்ச்சியைக் கண்டு நடுங்கி, மழலை சிறுவர்களுக்கு எதிராக பாய்ந்து பிராண்டும் இந்தப் போக்கு, உலகம் முழுவதும் எதேச்சாதிகாரிகளிடம் காணப்பட்ட அதே போக்குதான். இது ஆபத்தானது. சர்வாதிகாரத்தனமானது” என்று சிபிஎம் கட்சியின் கே பாலகிருஷ்ணன் கண்டனம்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
பெயரை சொல்லவே இல்லையே.. ஏன் குறுகுறுங்குது.. சிபிஎம் பாலகிருஷ்ணன் நறுக்*
சென்னை: “நகைச்சுவை நிகழ்ச்சியைக் கண்டு நடுங்கி, சிறுவர்களுக்கு எதிராக பாய்ந்து பிராண்டும் இந்தப் போக்கு, உலகம் முழுவதும் எதேச்சாதிகாரிகளிடம் காணப்பட்ட அதே போக்குதான். இது ஆபத்தானது. சர்வாதிகாரத்தனமானது” என்று சிபிஎம் கட்சியின் கே பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஜீ தமிழ் டிவியில், ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 4 என்ற நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகிறது… கடந்த 15ம் தேதி இந்த டிவியில் குழந்தைகள் கலந்து கொண்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது..
அதில், மறைமுகமாக பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்துள்ளதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
குறிப்பாக, பிரதமர் மோடி கொண்டு வந்த பணமதிப்பிழப்பு, அவரது சுற்றுப்பயணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் மறைமுகமாக அதில் விமர்சிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.. அதில் வரும் ஒரு சிறுவன், வடிவேலுவின் பிரபல இம்சை அரசன் போல வேடமிட்டு, அவரது உடல்பாவனைகளுடன் பேசுகிறான்… “நாட்டின் வளர்ச்சிக்கு எது தடையாக உள்ளது? இந்த கருப்பு பணம். எல்லா பணத்தையும் செல்லாது என சொல்லப்போகிறேன். அப்படி செஞ்சா கருப்பு பணம் ஒழிஞ்சிடும்ல” என்று பேசுகிறான்.
அதற்கு அமைச்சர் கெட்டப்பில் இருந்த இன்னொரு சிறுவன், ‘இதேமாதிரி ஒரு சம்பவம் சிந்தியானு ஒரு நாட்டுல நடந்துச்சு. அந்த மன்னரும் உங்களை மாதிரிதான் முட்டாள் தனமா பண்ணாரு. ஆனால் கருப்பு பணத்தை எங்க ஒழிச்சாரு. கலர் கலரா கோர்ட்டை மாத்திட்டுல சுத்துனாரு.. லாபத்தில் உள்ளதையும் ஏன் விற்கிறீர்கள் என்று கேட்கிறான்.
அதற்கு மன்னன், என்ன அமைச்சு! நீங்களும் மக்களே போலவே கேள்வி கேட்கறீங்க.. கேட்கறீர்கள்! நஷ்டத்தில் உள்ளதை வித்தால் நாம் எப்படி லாபம் பார்க்க முடியும். லாபத்தில் உள்ளதை விற்றால் தானே நாம் லாபம் பார்க்க முடியும் என்று பதிலளிக்கிறான்… இந்த வீடியோதான்.சோஷியல் மீடியாவில் படுவேகமாக வைரலானது.. இதை பார்த்த பலரும், குழந்தைகள் நிகழ்ச்சிதானே என்று சாதாரணமாகவும், நகைச்சுவையாகவும் எடுத்து கொண்டனர்.. ஆனால் பாஜகவினரே கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமரை எப்படி கேலி செய்து நிகழ்ச்சி நடத்தலாம் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.. அந்த சேனல் நிர்வாகத்தின் மீதும், கலந்து கொண்ட நடுவர்கள் மீதும், அக்குழந்தைகளின் பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.. அத்துடன் மட்டுமல்லாமல், இந்த நிகழ்ச்சி தொடர்பாக ஜீ தமிழ் டிவி நிர்வாகத்திடம் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது.
இது தொடர்பாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், 7 நாட்களுக்கும் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், மீறும் பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் இதுகுறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.. அது தொடர்பாக பதிவிட்ட ட்வீட்டில் உள்ளதாவது:
“ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரண்டு சிறுவர்கள் பங்கேற்ற நகைச்சுவை நிகழ்ச்சி, முறையற்ற ஆட்சியாளர்களை எள்ளி நகையாடுகிறது. அதில் பிரதமர் மோடியை எங்கும் குறிப்பிடவில்லை. ஆனால் ‘குற்றமுள்ள நெஞ்சமே குறுகுறுக்கும்’ என்ற வகையில் பாஜகவினர் அந்த தொலைக்காட்சியை மிரட்டத் தொடங்கியுள்ளனர்… நகைச்சுவை நிகழ்ச்சியைக் கண்டு நடுங்கி, சிறுவர்களுக்கு எதிராக பாய்ந்து பிராண்டும் இந்தப் போக்கு, உலகம் முழுவதும் எதேச்சாதிகாரிகளிடம் காணப்பட்ட அதே போக்குதான். இது ஆபத்தானது. சர்வாதிகாரத்தனமானது” என்று பதிவிட்டுள்ளார்.