புற்றுநோயால் மகன் பாதிப்பு, விஷ ஊசி போட்டுக் கொலை செய்த தந்தை,✍️ உள்பட மூவர் கைது✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
புற்றுநோயால் மகன் பாதிப்பு: விஷ ஊசி போட்டுக் கொலை செய்த தந்தை உள்பட மூவர் கைது
சேலம் அருகே கொங்கணாபுரத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆறாம் வகுப்பு படிக்கும் மகனை விஷ ஊசி போட்டுக் கொலை செய்த தந்தை உள்பட மூவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அருகே கச்சுபள்ளி குட்டைக்காரன் வளவு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (44) லாரி ஓட்டுநர். இவரது மனைவி சசிகலா (28). இவர்களுக்கு செந்தமிழ் (18), வண்ணத்தமிழ் (14) என இரண்டு மகன்கள்.
அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்த வண்ணத்தமிழ் கடந்த பல மாதங்களுக்கு முன்பு, சைக்கிள் ஓட்டிப் பழகிய நிலையில் கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். காலில் காயம் அடைந்த பகுதியில் புற்றுநோய்க் கட்டி ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார். பல்வேறு இடங்களில் மகனுக்கு சிகிச்சை அளித்தும் நோய் குணமாகாத நிலையில், பெற்றோர் வேதனையில் இருந்தனர். வண்ணத்தமிழுக்கு நாளுக்கு நாள் நோய் தாக்கம் அதிகரித்து அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில், வீட்டில் இருந்த வண்ணத்தமிழ் நேற்று முன்தினம் (3-ம் தேதி) திடீரென மர்மமான முறையில் உயிரிழந்தார். வண்ணத்தமிழை அவரது தந்தை விஷ ஊசி போட்டுக் கொலை செய்ததாக கொங்கணாபுரம் காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது.
இது சம்பந்தமாக சங்ககிரி டிஎஸ்பி நல்லசிவம், காவல் ஆய்வாளர் (பொ) கோபாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் வண்ணத்தமிழின் பிரேதத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
போலீஸார் தொடர் விசாரணையில், பெரியசாமி தனது மகன் வண்ணத்தமிழை விஷ ஊசி போட்டுக் கொலை செய்தது தெரியவந்தது. வண்ணத்தமிழ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்ததால், சகித்துக்கொள்ள முடியாத தந்தை பெரியசாமி, கொங்கணாபுரத்தில் உள்ள லேப் உரிமையாளரான வெங்கடேஷ் (37) என்பவரிடம் கூறி மகனைக் கருணைக் கொலை செய்யக் கேட்டுக் கொண்டுள்ளார்.
வெங்கடேஷ் அவருக்குத் தெரிந்த குரும்பப்பட்டியைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை மருத்துவ உதவியாளர் பிரபு (30) என்பவரை பெரியசாமியிடம் அறிமுகம் செய்துள்ளார். பிரபு உதவியுடன் பெரியசாமி, மகன் வண்ணத்தமிழுக்கு விஷ ஊசி போட்டுக் கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, பெரியசாமி, வெங்கடேஷ், பிரபு மூவரையும் போலீஸார் கைது செய்து, தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.