கோவில்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது✍️ அவரிடம் இருந்து 6 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
கோவில்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது
கோவில்பட்டி:
கோவில்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 6 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன.
தனிப்படை போலீசார்
கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் அடுத்தடுத்து 9 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனதாக புகார்கள் பதிவானது.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில், கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன் மேற்பார்வையில், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகண்ணன் தலைமையில் தனிப்படை போலீசார், திருடர்களை வலைவீசி தேடினர்.
வாலிபர் சிக்கினார்
இந்தநிலையில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு இளையரசனேந்தல் அணுகு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்தவழியாக வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். விசாரணையின் போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். சந்தேகமடைந்த போலீசார் அவரை, போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில், அவர் திண்டுக்கல் மாவட்டம் கும்மபட்டி மேலமீனாட்சி நாயக்கம்பட்டியை சேர்ந்த துரைப்பாண்டி மகன் முத்துராஜ் (வயது 31) என்பதும், கோவில்பட்டி பகுதியில் கடந்த 2 மாதங்களில் 9 மோட்டார் சைக்கிள்களை திருடியதையும், அதில் 3 மோட்டார் சைக்கிள்களின் என்ஜின், கியர்பாக்ஸ் பாகங்களை தனித்தனியாக பிரித்து விற்பனை செய்ததையும் ஒப்புக் கொண்டார்.
6 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு
இதையடுத்து அவர் கூறிய இடங்களில் இருந்து 6 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
முத்துராஜை கைது செய்த போலீசார், அவருக்கு வேறு எந்த திருட்டு வழக்கிலும் தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.