ஆசிரியர்களை பணியில் இருந்து நீக்கக் கூடாது: தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்
கொரோனா நெருக்கடியை காரணம் காட்டி, ஆசிரியர்களை பணியில் இருந்து நீக்கக்கூடாது என தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தி யுள்ளார்.
சென்னை அடையாரில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி சங்கத்தின் சார்பில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வருமாறு தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்தக்கூடாது என தெரிவித்தார். மாணவர்கள் மாஸ்க் அணியாமல் வந்தால் அவர்களுக்கு பள்ளிகள் மூலமாக வழங்க ஏற்கனவே உத்தரவிடப் பட்டுள்ளது என்றும் அதற்கான நிதி பள்ளிக் கல்வித் துறை மூலமாக வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
தனியார் பள்ளி ஆசிரியர்கள் சுமார் மூன்று லட்சம் பேர் தமிழகத்தில் உள்ளனர் என்றும் கொரோனா காலகட்டத்தில் அவர்கள் போதிய வருமானம் இல்லாமல் தவித்து வருவதாக வும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் அவர்களின் ஆசிரியர்களுக்கு முறையாக ஊதியத்தை வழங்க தொடர்ந்து அறிவுறுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.