நாகர்கோவிலில் கடன் தொல்லையால் துயரம்.. தாய், மகன் சயனைடு சாப்பிட்டு தற்கொலை✍️.. மனைவி, குழந்தைகள் பரிதவிப்பு✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
கடன் தொல்லையால் துயரம்.. தாய், மகன் சயனைடு சாப்பிட்டு தற்கொலை.. மனைவி, குழந்தைகள் பரிதவிப்பு.!
கடன் தொல்லை காரணமாக தாய், மகன் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்ட சோகம் கன்னியாகுமரியில் நடந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வெட்டூரணிமடம் நெசவாளர் காலனி பகுதியை சார்ந்தவர் சுரேஷ் குமார் (வயது 48). இவர் தங்க நகைவைக்கும் பெட்டி செய்யும் தொழிலை செய்து வந்துள்ளார். இவரது மனைவி மஞ்சுளா. இந்த தம்பதிகளுக்கு 17 வயதுடைய சஞ்சின், 14 வயதுடைய சஞ்சித் சக்திவேல் என்ற 2 மகன்கள் உள்ளனர். சுரேஷ் குமாருடன் அவரது தாயார் சந்தகுமாரியும் (வயது 70) வசித்து வந்துள்ளார்.
கடந்த 2 மாதத்திற்கு முன்னதாக சுரேஷ்குமார் குடும்பத்துடன் ராமவர்மபுரம் வெள்ளாளர் காலனியில் இருக்கும் வீட்டில் வாடகைக்கு குடியேறி இருக்கிறார். மேலும், சுரேஷ் குமாருக்கு சரிவர வேலையும் கிடைக்காமல், கடன் வாங்கி குடும்பம் நடத்தி வந்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுக்கவே, இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டு இருக்கிறார்.
நேற்று மாலை நேரத்தில் சுரேஷ் குமாரின் மனைவி மஞ்சுளா மற்றும் ஒரு மகன் உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட, வீட்டில் சுரேஷ் குமார், சுரேஷின் தாயார் சாந்தகுமாரி, ஒரு மகன் ஆகியோர் இருந்துள்ளனர். மஞ்சுளா வீட்டிற்கு வர நேரமாகிவிட, மகன் தனது அறையில் தூங்க சென்றுள்ளார். வீட்டிற்குள் இருந்த சுரேஷ் குமார் மற்றும் சாந்தகுமாரி ஆகியோர் பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.
இந்த நிலையில், இரவு மஞ்சுளா வீட்டிற்கு வந்து பார்க்கையில் கணவர் மற்றும் மாமியார் மயங்கி இருப்பதை கண்டுள்ளார். பின்னர், அவசர ஊர்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு, அவர்கள் இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த நேசமணி நகர் காவல் துறையினர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். விசாரணையில், கடன் பிரச்சனையால் இருவரும் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.