காதல் என்ற பெயரில் 14 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர் கைது!
ஈரோட்டில் செல்போன் அழைப்பில் ஏற்பட்ட பழக்கத்தில் 14 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த கட்டிட தொழிலாளியை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் வடக்குமா தேவி ஏரிக்கரையை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி வேல்முருகன் (வயது 24). இவர், சில மாதங்களுக்கு முன்பு, அவரது செல்போனில் தவறுதலாக ஒரு எண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பின் மூலம் ஈரோட்டை சேர்ந்த ஒருவரின் நம்பருக்கு சென்றுள்ளது. அந்த மிஸ்ட் காலை பார்ந்த 14 வயது சிறுமி மீண்டும் மிஸ்ட் கால் வந்த நம்பருக்கு அழைத்து பேசியுள்ளார். அதற்கு வேல் முருகன் தவறான நம்பருக்கு அழைத்துவிட்டதாக கூறியுள்ளார். பின்னர் அந்த சிறுமி வேல் முருகனின் ஊர், பெயர், வேலை குறித்த விவரங்களை கேட்டு தொடர்ந்து பேசியுள்ளார். மேலும் அந்த பொபைல் சிறுமியின் தந்தையுடது என்பதால், அவர் இல்லாத நேரத்தில் சிறுமியும் வேல்முருகனும் தினமும் தொடர்ந்து பேச ஆரம்பித்துள்ளனர்.
இவர்களின் செல்போன் நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. செல்போனில் அடிக்கடி பேசுவது குறித்து சிறுமியின் பெற்றோர் கேட்டதற்கு தனது தோழிகளுடன் பேசுவதாக சிறுமி கூறியுள்ளார். இதனால் பெற்றோரும் அதுகுறித்து பெரிதுபடுத்தவில்லை. இந்நிலையில் கடந்த வாரத்தில் திடீரென ஒருநாள், சிறுமி காணாமல் போயுள்ளார். இதைத்தொடந்து சிறுமியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது தனது மகள் தன்னுடைய செல்போனில் அடிக்கடி பேசிக்கொண்டிருப்பார் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் அவருடைய செல்போனை வாங்கி சோதனை செய்த போலீசார் குறிப்பிட்ட ஒரு எண்ணிற்கு மட்டுமே அடிக்கடி பேசியிருப்பதை கண்டறிந்தனர்.
பின்னர் அந்த எண்ணை வைத்து சோதனை செய்ததில் அது பெரம்பலூரைச் சேர்ந்த வேல்முருகன் என்பதை கண்டறிந்தனர். அதைத்தொடர்ந்து பெரம்பலூர் சென்ற போலீசார் வேல்முருகனை கைது செய்து சிறுமியை மீட்டனர். ஆனால் அதற்குள்ளாக வேல்முருகன் சிறுமியை திருமணம் செய்துகொண்டு அவருடைய சொந்த ஊருக்கும் சென்றுள்ளார். இதனால் 14 வயது சிறுமியை காதல் என்ற பெயரில் ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் வேல்முருகன் மீது வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.