நுழைவுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்! ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம்!
கொரோனா பெருந்தொற்று காரணமாக பிளஸ் 2 தேர்வை ரத்து செய்ததுபோல், நீட் உள்ளிட்ட அனைத்து தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
முன்னதாக நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது என தமிழ் நாடு அரசின் தரப்பில் அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், நுழைவுத் தேர்வுகள் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், தமிழகத்தில் நீட் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார்.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்துள்ள நிலையில், நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் நடத்துவது ஏற்புடையதாக இருக்காது, மாநில கல்வித் திட்டத்தின் அடிப்படையில் உயர்கல்வி சேர்க்கை என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இன்று காலை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நடப்பாண்டில் நுழைவுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வெளியிட்ட அறிக்கையில், “தேசிய அளவில் சி.பி.எஸ்.இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளும், பல மாநிலங்களில் மாநிலப் பாடத்திட்டத்தின்படியான 12&ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுவிட்ட நிலையில் தமிழ்நாட்டிலும் மாநிலப் பாடத்திட்டத்தின்படியான 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும்; அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப் பட வேண்டும். முந்தைய பருவத் தேர்வுகளின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் மதிப்பெண் அளிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும்.
தேசிய அளவில் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு உள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வுகளும் நடப்பாண்டில் ரத்து செய்யப்பட வேண்டும். மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட தேர்வு வாரியங்கள் வழங்கியுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் கலை மற்றும் அறிவியல், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும்” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.