எதிர்க்கட்சி தலைவராக தேர்வுசெய்யப்பட்ட பின்… ஓபிஎஸ்-ஐ நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற பழனிசாமி*
சென்னை: சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழக முதல்வராகக் கடந்த 7ஆம் தேதி பதவியேற்றார்.
இந்தத் தேர்தலில் அதிமுக 65 தொகுதிகளில் வென்று, பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவரைத் தேர்ந்தெடுக்க அலுவலகத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
இருப்பினும், இந்த முடிவில் ஒ பன்னீர்செல்வத்திற்கு முழு உடன்பாடு இல்லை என்று கூறப்பட்டது. மேலும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திலிருந்து அவர் கடுகடுத்த முகத்துடனேயே வெளியேறியதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தைச் சென்னையிலுள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.