நடிகர் மன்சூர் அலிகானுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. ஐசியூவில் அனுமதி.. தீவிர சிகிச்சை✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
நடிகர் மன்சூர் அலிகானுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. ஐசியூவில் அனுமதி.. தீவிர சிகிச்சை!*
சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் மன்சூர் அலி கான்.
1990 ஆம் ஆண்டு வெளியான வேலை கிடைச்சுடுச்சு படத்தின் முலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
ஆர்கே செல்வமணி இயக்கத்தில் வெளியான கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் பெரும் பிரபலமானார். பாலிவுட் நடிகர் அனுபம் கெரின் நடிப்பு பள்ளியில் பயிற்சி கற்றுக்கொண்டவர் மன்சூர் அலி கான்.
அரசியலிலும் அதிக ஆர்வம் கொண்ட மன்சூர் அலி கான் பல்வேறு கட்சிகளுக்காக பணியாற்றியுள்ளார். 2019ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல்லில் போட்டியிட்ட மன்சூர் அலி கான் நடநத் முந்த சட்ட சபை தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி போட்டியிட்டார்.
மன்சூர் அலி கான் பல சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். அண்மையில் நடிகர் விவேக் மாரடைப்பால் மரணமடைந்த போது, கொரோனா தடுப்பூசி போட்டதுதான் அவரது மறைவுக்கு காரணம் என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
இதனை தொடர்ந்து தடுப்பூசிக்கு எதிராக பேசி மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்துவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் புகார் அளித்தார். இதனால் தான் கைதாவோம் என்று அஞ்சிய மன்சூர் அலி கான் முன் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்தார்.
இந்நிலையில் நடிகர் மன்சூர் அலி கான் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மன்சூர் அலி கான்.
சிறுநீரக கல் பிரச்சனைக்காக மன்சூர் அலிகானுக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மன்சூர் அலி கான் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது திரைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.