கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் புதன்கிழமை வருஷாபிஷேகம்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் புதன்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, திருவனந்தல் பூஜை மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது.
பின்னர் 6 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து, 7 மணிக்கு கோயில் மண்டபத்தில் கணபதி ஹோமம், யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, காலை 11 மணிக்கு யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, திருக்கோயில் பிரகாரம் வழியாக வந்து சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர் மற்றும் சாலகார கோபுர கலசங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பின்னர் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் திருவீதியுலா நடைபெற்றது.
விழாவில், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவர் ராஜகோபால், கோயில் ஆய்வாளர் சிவகலைப்பிரியா, மண்டகப்படிதாரர் கு.வேலாயுதம் செட்டியார் குடும்பத்தினர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.