கோவில்பட்டியில் அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தை நாம்தமிழர்கட்சியினர் முற்றுகை✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முற்றுகை
கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பாரதி நகர் மேட்டுத் தெரு, ஓடைத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பாரதி நகர், 4ஆவது மேட்டுத் தெரு, ஓடைத் தெரு, ஓடைத் தெரு தெற்கு பகுதி, அம்பேத்கர் தெரு, கருமாரியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தனிக்குடிநீர் திட்டத்தின் கீழ் பகிர்மானக் குழாய் நிறைவு பெற்று, குடிநீர் சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டு, பணி நிறைவு சான்று வழங்கப்படாமல் உள்ளது.
இதையடுத்து, இப்பகுதியில் பகிர்மானக் குழாய் பதிக்கும் பணி மற்றும் குடிநீர் விநியோகிக்கும் சோதனை ஓட்டம் ஆகியவற்றை விரைந்து முடிக்க வேண்டும். சிதிலமடைந்த நிலையில் உள்ள சாலைகளை செப்பனிட வேண்டும். கழிவுநீர் ஓடையை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் நாம் தமிழர் கட்சியின் தொகுதி செயலர் மருதம் மா.மாரியப்பன் தலைமையில், நகராட்சி அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில், கட்சியின் மாவட்ட வழக்குரைஞர் பிரிவைச் சேர்ந்த ரவிகுமார், தொகுதி தலைவர் தங்கமாரியப்பன், துணைத் தலைவர் கருப்பசாமி, ஒன்றியத் தலைவர் செந்தூர் உள்பட அப்பகுதி பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் போராட்டக் குழுவினர் நகராட்சி ஆணையர் ஓ.ராஜாராமிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட அவர், தங்கள் கோரிக்கை விரைவில் நிறைவேற நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர்.