மதுக்கடையால், கிராமத்தில் இருந்து குலதெய்வங்கள் வெளியேறியதாக குற்றம்சாட்டி, அந்த கடையை மூடக்கோரி, மக்கள் போராட்டம்✍️ முழுவிவரம் – விண்மீன்நியூஸ்
கிராமத்தில் இருந்து வெளியேறிய தெய்வங்கள்: மதுக்கடையை மூடக்கோரி மக்கள் போராட்டம்*
மேச்சேரி: மதுக்கடையால், கிராமத்தில் இருந்து குலதெய்வங்கள் வெளியேறியதாக குற்றம்சாட்டி, அந்த கடையை மூடக்கோரி, மக்கள் போராட்டம் நடத்தினர்.
சேலம் மாவட்டம், மேச்சேரி, பள்ளிப்பட்டி ஊராட்சி, வெடிக்காரனூரில், 3 ஆண்டுக்கு முன், டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. அதன் அருகே, வெடிக்காரனூர் மக்களின் குலதெய்வங்களான, பெரியாண்டிச்சி, அய்யனாரப்பன் கோவில்கள் உள்ளன. ஆனால், டாஸ்மாக் கடையால், குலதெய்வங்கள் வெளியேறிவிட்டதாக கூறி, அக்கடையை மூட, கிராம மக்கள் வலியுறுத்தினர். இதனால், கட்டட உரிமையாளர் கிருஷ்ணன், டாஸ்மாக் கடையை காலி செய்ய, டாஸ்மாக் நிர்வாகத்திடம் கூறினார். நிர்வாகம், மூன்று மாதம் அவகாசம் கேட்டது. அது, கடந்த, 6ல் முடிந்த நிலையில், நேற்று முன்தினம், ஊழியர்கள், வழக்கம்போல் கடையை திறந்து மதுபானங்களை விற்றது, மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நேற்று மதியம், 12:00 மணிக்கு, டாஸ்மாக் ஊழியர்கள் கடையை திறக்க வந்தனர். இதற்கு, எதிர்ப்பு தெரிவித்த, வெடிக்காரனூர் மக்கள், 50க்கும் மேற்பட்டோர், சாலையில் அமர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். மேட்டூர் கலால் தாசில்தார் அருள்தாசன், மேச்சேரி போலீசார், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ‘டாஸ்மாக் கடை திறந்ததால், மூன்று ஆண்டாக பண்டிகை நடத்த முடியவில்லை. குலதெய்வமும் வெளியேறிவிட்டது. பண்டிகைக்கு பலி கொடுக்க, 200 ஆடுகளை வளர்க்கிறோம். கடையை காலி செய்தால் மட்டும், பண்டிகை நடத்த முடியும். அதனால், கடையை திறக்க விடமாட்டோம்’ என, மக்கள் கூறினர். இதனால், கடையை திறக்காமல் ஊழியர்கள் திரும்ப, மக்களும் கலைந்து சென்றனர். தொடர்ந்து, டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக, போலீசார் கூறினர்.