போலீசாராக நடித்து மளிகை கடைக்காரர் குடும்பத்தினரை கட்டிப் போட்டு 20 பவுன் நகை 1 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் அதிரடியாக தேடல்✍️முழுவிவரம் – விண்மீன்நியூஸ்
மளிகை கடைக்காரர் வீட்டில் போலீசாக நடித்து கொள்ளை*
தஞ்சாவூர்: போலீசாராக நடித்து மளிகை கடைக்காரர் குடும்பத்தினரை கட்டிப் போட்டு 20 பவுன் நகை 1 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் கீழவாசல் பகுதியைச் சேர்ந்தவர் மலையபெருமாள் 55. மளிகை கடை நடத்தி வரும் இவரது வீட்டுக்கு நேற்று காலை 8:00 மணியளவில் ‘டிப் – -டாப்’ ஆக மூன்று பேர் வந்தனர். தங்களை போலீஸ்காரர்கள் எனக் கூறிய அவர்கள் டிசம்பர் 17ம் தேதி செங்கிப்பட்டியில் உங்களுடைய கார் விபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான ‘சிசிடிவி’ பதிவுகள் உள்ளன. 1 கோடி ரூபாய் தர வேண்டும். 50 லட்சம் ரூபாய் முன்பணமாக கொடுத்தால் வழக்கை முடித்து மீதி தொகையை பெற்றுக் கொள்வதாக கூறியுள்ளனர்.
அவர்கள் மீது சந்தேகம் அடைந்த மலையபெருமாள் சத்தம் போட முயன்றதால் அவரை வீட்டின் மாடிக்கு இழுத்துச் சென்று கயிற்றால் கட்டி போட்டனர். சத்தம் கேட்டு வந்த மலையபெருமாள் மனைவி மகளையும் கட்டி வைத்தனர்.கடையில் இருந்த மலையபெருமாள் மகன் பாலாஜி வீட்டிற்கு வந்தபோது பெற்றோரையும் தங்கையையும் கட்டி வைத்திருப்பதை பார்த்து சத்தம் போட்டுள்ளார்.
அவரையும் தாக்கி கட்டி போட்டனர். தொடர்ந்து கைத் துப்பாக்கியை காட்டி மிரட்டி பீரோவில் இருந்த 20 பவுன் நகை 1 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்து ‘டூ – வீலரில்’ தப்பிச் சென்றனர். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை அவிழ்த்து விட்டனர். கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.