முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பதாகவும், கூட்டணியை இறுதி செய்ய ஓபிஎஸ், ஈபிஎஸ்-க்கு அதிகாரம் வழங்குவதாகவும் அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக சட்டசபை பொதுத்தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ளது. கடந்த 2 பொதுத்தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்த அ.தி.மு.க. இப்போது 3-வது முறையாக வெற்றி பெற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திக்க உள்ளது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க.வின் முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்பட்டுள்ளார். இதையொட்டி அவர் தமிழகம் முழுவதும் சென்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் அ.தி.மு.க.வின் செயற்குழு-பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று காலை கூடியது.
பொதுக்குழு கூடுவதையொட்டி வானகரம் முழுவதும் அ.தி.மு.க. கொடி, தோரணங்கள், வாழை மரங்கள் வழிநெடுகிலும் கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது.
பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து 3,500-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் காலை 9 மணிக்கு பொதுக்குழு கூட்டத்துக்கு வர தொடங்கினர்.
ஒருங்கிணைப்பாளர், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் காலை 10.50 மணிக்கு பொதுக்குழுவுக்கு வந்தார்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி
அவரை தொடர்ந்து 10.55 மணிக்கு இணை ஒருங்கிணைப்பாளர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்தார்.
அப்போது தொண்டர்கள் “எடப்பாடி வாழ்க”, “ஓ.பி.எஸ். வாழ்க”, “வெற்றி நமதே” “நாளையும் நமதே” என்று கோஷமிட்டனர்.
கூட்டம் தொடங்கியதும் மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
அதைத் தொடர்ந்து மேடைக்கு வந்திருந்த கட்சியின் மூத்த நிர்வாகிகளும் ஜெயலலிதா படத்துக்கு மரியாதை செலுத்தினர்.
பொதுக்குழு கூட்டம் சரியாக 11 மணிக்கு தொடங்கியது. கூட்டத்துக்கு அவை தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார்.
கூட்டம் தொடங்கியதும் மறைந்த அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
அதைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழு கூடியதும் முதலில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் கூட்டணி குறித்து முடிவு எடுக்க ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் 3-வது முறையாக தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சி அமைய ஒவ்வொரு அ.தி.மு.க. தொண்டர்களும் கடுமையாக பாடுபட வேண்டும் என்றும் மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது தவிர மொத்தம் 16 தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன. ஒவ்வொரு தீர்மானமும் நிறைவேற்றப்படும்போது பொதுக்குழு உறுப்பினர்கள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
அதிமுக பொதுக்குழுவில் தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக் திறக்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன் பிறகு தலைமைக்கழக மூத்த நிர்வாகிகள் பொதுக்குழுவில் பேசினார்கள். அதைத் தொடர்ந்து துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் விரிவாக பேசினார்கள்.
தமிழகத்தில் அ.தி.மு.க. தான் மிகப்பெரிய கட்சியாகும். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி ஜெயலலிதா வழிகாட்டுதல்படி இந்த இயக்கம் வெற்றிநடை போடுகிறது.
இந்த தேர்தலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்கும் கட்சிகள்தான் கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்கள்.
இறுதியாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆவேசமாக பேசினார்கள்.
வருகிற தேர்தலில் அம்மா ஆட்சி மீண்டும் அமைய நாம் அனைவரும் பாடுபட வேண்டும். இதற்காக ஒவ்வொருவரும் கடுமையாக உழைக்க வேண்டும். கூட்டணி விஷயத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். வெற்றி ஒன்றே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். அ.தி.மு.க. அரசின் சாதனைகளை பட்டி தொட்டி எங்கும் சென்று பிரசாரம் செய்ய வேண்டும்.
மக்களுக்கு நாம் நிறைய திட்டங்களை செய்து கொடுத்துள்ளோம். அவற்றை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்ல வேண்டும். ஒவ்வொருவரும் அ.தி.மு.க.வின் வெற்றிக்காக பாடுபட வேண்டும்.
பொதுக்குழுவில் பங்கேற்க வந்த உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து அதற்கான சான்றிதழையும் கொண்டு வந்திருந்தனர். அனைவரும் முக கவசம் அணிந்திருந்தனர்.
இந்த பொதுக்குழுவில் அமைச்சர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள். மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் உள்பட 3,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று இருந்தனர்.
பொதுக்குழு கூட்டம் முடிந்ததும் அ.தி.மு.க. தலைமைக் கழகத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் முக்கிய அமைச்சர்கள், நிர்வாகிகள் மாலை 5 மணிக்கு செல்கிறார்கள். அங்கு அ.தி.மு.க. தேர்தல் கூட்டணி குறித்து விரிவாக விவாதிக்கிறாகள்.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை குறித்தும் இதில் ஆலோசித்து முடிவு செய்யப்படுகிறது. இது தொடர்பாக இன்று மாலை சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.