ஆட்டோ டிரைவரை அதிர வைத்த முன்னாள் எம்.எல்.ஏ நன்மாறன்✍️கையில் 20 ரூபாய்தான் இருக்குது போதுமா?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
கையில் 20 ரூபாய்தான் இருக்குது போதுமா? – ஆட்டோ டிரைவரை அதிர வைத்த முன்னாள் எம்.எல்.ஏ
மதுரை முனிச்சாலையைச் சேர்ந்தவர் பாண்டி என்பவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டித் தொழில் செய்து வருகிறார்.
கடந்த 27-ம் தேதி காலையில் மதுரை அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து கோரிப்பாளையம் நோக்கி பாண்டி சென்று கொண்டிருந்தார்.
அரசு மருத்துவமனை அருகே பேருந்தில் ஏற முயன்ற பெரியவர் ஒருவர் தன்னுடைய ஒற்றைக்கால் செருப்பைத் தவற விட்டுவிட்டார்.
உடனே, பேருந்தில் இருந்து இறங்கிய பெரியவர், தன் செருப்பை தேடிக் கொண்டிருந்தார்.
இதை கண்ட பாண்டி, அந்தப் பெரியவர் மதுரையின் முன்னாள் எம்.எல்.ஏ நன்மாறன் என்பதை அறிந்து வியந்து போனார்.
பிறகு, நன்மாறனை எங்கே போய் இறக்கி விட வேண்டுமென்று பாண்டி கேட்டுள்ளார்.
அதற்கு, கருப்பாயூரணி செல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
அதே வேளையில் தன்னிடத்தில் ஆட்டோவுக்கு கொடுக்க 20 ரூபாய்தான் இருக்கிறது என்று அப்பாவியாக கூறியிருக்கிறார்.
மதுரை கிழக்கு தொகுதி முன்னாள் எம்.எல். ஏ நன்மாறனின் நிலையை கண்டு பாண்டி அதிர்ந்தும் போனார்.
அரசியலில் நேர்மையாக வாழ்ந்த அந்த மனிதரை கருப்பாயூரணி சென்று இறக்கி விட்டு மன நிறைவுடன் திரும்பினார் பாண்டி .
பிறகு தன் ஃபேஸ்புக்கில் அவர் வெளியிட்ட பதிவுதான் தற்போது வைரலாகியுள்ளது.
அதில், ஒற்றைக் கையில் செருப்புடன் அந்தப் பெரியவர் ஏதோ தேடி சென்று கொண்டிருந்தார்.
தன்னுடைய இன்னொரு செருப்பை கண்டுபிடித்த மகிழ்ச்சியில் இரண்டு செறுப்பையும் காலில் போட்டுக்கொண்டு நின்றவரைஅருகில் சென்று பார்த்த உடனே அடையாளம் தெரிந்தது கொண்டு ஐயா வணக்கம் எங்க போகணும் என்று கேட்டவுடன் தம்பி கருப்பாயூரணி போகணும் ஆனால் என்கிட்ட 20 ரூபாய் மட்டும் தான் இருக்கு இறக்கிவிட முடியுமா என்று கேட்டார் தாராளமா வாங்க ஐயா என்று சொல்லி இறக்கிவிட்டு மனநிறைவுடன் வந்தேன்.
வேறும் 20 ரூபாய் உடன் ஒற்றைக் கால் செருப்பை கையில் எடுத்துக் கொண்டு மறு செருப்பை தேடித் திரிந்த அந்த பெரியவர் தான் .
கிழக்குத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த எளிமையின் ஏணி நன்மாறன் ஐயா .
கொள்கையில் முரண்பாடுகள் இருந்தாலும் மிகவும் எளிமையான நேர்மையான மனிதநேயம் கொண்ட மனிதனாக மிகவும் பிடித்த நபர் என்று அந்த பதிவு சொன்னது.
ஆரப்பாளையத்தில் வசித்து வரும் நன்மாறனின் மூத்த மகன் குணசேகரன் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள பாண்டியன் கிராம வங்கியில் பணியாற்றுகிறார்.
இளைய மகன் ராஜசேகரன், மதுரை அரசு மருத்துமனையில் தற்காலிகப் பணியில் உள்ளார்.