மேலதிகாரியின் அறைக்கு ஊழியர் ஒருவர் செல்கிறார்.
அன்று செய்ய வேண்டிய வேலைகளை அதிகாரி வேகமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அதைக் குறிப்பெடுக்கும் ஊழியருக்கு அந்த அதிகாரி மீது அதிக மரியாதை.
திடீரென்று ஊழியரின் பேனா எழுதவில்லை.
மை தீர்ந்து போய் விட்டது.
அவர் இருக்கைக்குச் சென்று பேனா எடுத்து வரவேண்டுமானால்
ஐந்து நிமிடங்கள் ஆகி விடும்.
அதிகாரியின் டேபிளில் ஏராளமான பேனாக்கள் இருக்கின்றன.
இப்போது ஊழியர் தயங்கித் தயங்கிப் பேசுகிறார்.
‘‘சார்…’’
“என்னப்பா?”
“இந்த பே…’’
“என்னது பே..?”
“இல்லை சார்!
பேனா… வந்து…”
“என்ன பேனாவுக்கு?
நான் என்ன சொல்லிட்டு இருக்கேன், நீங்க என்ன சொல்றீங்க?”
“பேனா மை தீர்ந்து போச்சு!”
‘‘பேனா வேலை செய்யலையா?
உங்களுக்குப் பேனா வேணுமா?… எடுத்துக்கோங்க!
இதைக் கேக்க
ஏன் இவ்வளவு தயங்குறீங்க?
எவ்வளவு நேரம் வீணாகுது பாருங்க!
‘சார்,
ஒரு பேனா எடுத்துக்கிறேன்’னு
கம்பீரமா கேட்குறதை விட்டுட்டு ஒவ்வொரு வார்த்தையையும் ஏன் முழுங்கறீங்க?’’ என்று எரிந்து விழுந்தார்.
இந்தத் தவறை வேலைக்குச் சேர்ந்த புதிதில் நம்மில் பலரும் செய்திருப்போம்.
அதிக மரியாதை என்று நினைத்து நமக்கு மேலே இருப்பவர்களிடம்
பயந்து போய் இருப்போம்.
மரியாதை வேறு, பயம் வேறு.
நிச்சயமாக நமக்கு மேலே இருக்கும் அதிகாரியை,
முதலாளியை,
பெரியவர்களை மதிக்க வேண்டும்.
ஆனால்,
வீணாக பயப்படத் தேவையில்லை.
ஒரு வாக்கியத்தை தெளிவாக முடிக்க முடியாதபடி அவர்கள் மேல் பய உணர்ச்சி கொள்ளத் தேவையில்லை.
ஒரு வாக்கியத்தை தெள்ளத் தெளிவாக அவர்கள் கண்களைப் பார்த்துப் பேசினால்
அது மரியாதைக் குறைவும் இல்லை.
யாரும் நம்மைத்
தவறாக நினைக்க மாட்டார்கள்.
நாமாக,
‘நம்மைத் திமிர் பிடித்தவன் என்று
இவர் நினைத்து விடுவாரோ’ என்று கற்பனை செய்து கொண்டு தான் வாக்கியத்தை முழுங்கி முழுங்கிப் பேசுகிறோம்.
நம்மையும் கஷ்டப்படுத்தி,
அவர்களையும் கஷ்டப்படுத்துகிறோம்.
உலகைப் படைத்த கடவுளே
உங்கள் முன்னால் வந்து நின்று பேசினாலும் சரி…
ஒரு வாக்கியத்தை தெளிவாக, கச்சிதமாகப் பேசி முடியுங்கள்.
முழுங்கி முழுங்கிப் பேசாதீர்கள்.
அப்படிப் பேசினால் கடவுளே அதைத் திமிராக எடுத்துக் கொள்ள மாட்டார். அதை ரசிப்பார்.
தெளிவாகப் பேசும் போது அங்கே வேலை எளிதாக முடிகிறது. ‘ மரியாதை வேறு, பயம் வேறு’ என்பதை ,
எப்போதும் மனதில் நிறுத்திக் கொண்டால் வாழ்க்கை இனிதாகும்.