பிஸ்கட் கப் டீ” மதுரை டீக்கடையில் புதுமை?சாப்பிடுங்க பாஸ், குடிச்சிகிட்டே கடிச்சிக்கலாமா?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
குடிச்சுக்கிட்டே கடிச்சிக்கலாமா? சாப்பிடுங்க பாஸ் ‘பிஸ்கட் கப் டீ’: மதுரை டீக்கடையில் புதுமை
குடிச்சுக்கிட்டு கடிச்சிக்க வசதியாக மதுரை டீக்கடையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘பிஸ்கட் கப் டீ’ பலரது வரவேற்பை பெற்றுள்ளது. எதிலும் புதுமை புகுத்துவது மதுரைக்காரர்களுக்கான அடையாளமாக இருக்கிறது. இவ்வகையில் டீ விற்பனையிலும் மதுரைக்காரர்கள் புதுமை புகுத்தியுள்ளனர். நகருக்குள் தெருக்கள்தோறும் டீக்கடைகளுக்கு பஞ்சமிருக்காது. உழைப்பாளரின் உணவாகவே டீ மாறிக்கிடக்கிறது. வடையை கடித்து, டீயை உறிஞ்சி விட்டு, பணி தொடர்வதே மதுரைவாசிகள் பலரின் உற்சாகப்பொழுதாக இருக்கிறது. மதுரை கடைகளில் லெமன் டீ, கிரீன் டீ, மூலிகை டீ, புதினா டீ, இஞ்சி டீ என்பதோடு, ‘அவிச்ச’ டீ என்ற ஒருவகை டீ விற்பனையும் இருந்தது. அதாவது, டீத்தூளை வெந்நீரில் போட்டு அவித்தெடுத்து, அதன் சாற்றில் பால் கலந்து பக்குவமாகத் தருவார்கள். இதற்கெல்லாம் உச்சமாக தற்போது மதுரையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘பிஸ்கட் கப் டீ’ புதுமையின் உச்சம் தொட்டிருக்கிறது.
மதுரையைச் சேர்ந்த விவேக் சபாபதி என்பவர், மேற்குவெளி வீதியில் தனது கடையில் இந்த ‘பிஸ்கட் கப் டீ’யை அறிமுகப்படுத்தி, மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்று வருகிறார். அவரிடம் பேசியபோது, ‘‘பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் டீ கப்களை கையாள்வது பெரும் சவாலாக இருக்கிறது. டீ குடித்ததும் இந்த கப்களை தூக்கி எறிகின்றனர். இதை மாற்றி யோசித்து பார்த்தேன். ஐஸ்கிரீம் கோன் போன்று, வேப்பர் பிஸ்கட் கப் தயாரித்து அதில் டீ பரிமாற முடிவெடுத்தேன். மோல்டிங்கில் இந்த கப் தயாரித்து பெற்றுள்ளேன். இதில் டீயை நிரப்பினால், குறைந்தது 10 நிமிடங்களுக்கு ஊறி உடையாமல் கப் தாங்கும். சூடும் வெளியேறாது. டீயை குடித்து விட்டு, முடிவில் அப்படியே பிஸ்கட்டையும் கடித்துச் சாப்பிடலாம். எந்த புதுமையையும் விரும்பி ஏற்கும் மதுரை மக்கள், இந்த புதுமையான பிஸ்கட் கப் டீயையும் வரவேற்றுள்ளனர்’’ என்றார்