“கொரோனா பெட்டிக்கடை”வாழ்வாதாரத்தை இழந்த தன் பெயரிலேயே முதலீடு? டிரெண்டான கூடலூர் கொரோனா பெட்டிக்கடை?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
வாழ்வாதாரத்தை இழந்ததன் பெயரிலேயே முதலீடு!’-டிரெண்டான கூடலூர் `கொரோனா பெட்டிக்கடை’
நீலகிரி மாவட்டம் கூடலூர் பழைய நீதிமன்றம் செல்லும் சாலையோரத்தில் உள்ள ஒரு சிறிய உணவகக் கட்டடத்தின் ஒரு பகுதியில் சிறிய பெட்டிக்கடை ஒன்று புதிதாக திறக்கப்பட்டுள்ளது. அந்தப் பெட்டிக்கடை ஒன்றும் விசேஷமானது அல்ல. அந்தக் கடைக்கு வைக்கப்பட்ட பெயர்தான் விசேஷமானது. காரணம் அந்தப் பெட்டிக்கடைக்கு கொரோனா என பெயர் வைக்கப்பட்டிருப்பதுதான்.
ஒட்டுமொத்த மனித குலத்தையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் பெயர் ஏன் இந்த கடைக்கு வைக்கப்பட்டது. யார் வைத்தார்கள் எனத் தேடினோம்
புதிதாக கடைத்திறந்து அதில் முதலாளியாக அமர்ந்து வியாபாரம் செய்துகொண்டிருந்த நடுத்தர வயதுடைய நபரிடம் பேசினோம். “என் பெயர் ரமணா. கேரள மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் துணிக்கடையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வேலைசெய்து வந்தேன். கொரோனா பரவல் காரணமாக சில மாதங்களுக்கு முன்பே கடைகளை அடைத்து சொந்த ஊருக்கு போகச் சொல்லிவிட்டார்கள்.
படாதபாடுபட்டு இங்கு வந்தேன். இங்கு வந்தும் எந்த வேலை வாய்ப்பும் இல்லை. 80 நாள்களாக வீட்டிலேயே இருந்தேன். சமீபத்தில் மீண்டும் கேரளாவில் ஒரு வேலை கிடைத்தது. அங்கு வரச்சொன்னார்கள். கிளம்பத் தயாரானபோது மீண்டும் ஊரடங்கு என அறிவித்தார்கள்.
வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கும்போதுதான் அருகில் இருந்த ஹோட்டலின் ஒரு பகுதியில் பெட்டிக்கடை வைத்துக்கொள்கிறேன் என கேட்டேன். அவர்களும் சம்மதித்தார்கள்
கொரோனாவால்தான் வாழ்வாதாரத்தை இழந்தோம். சரி, அது பெயரிலேயே வாழ்க்கையைத் துவங்கலாம் என முதலீடு செய்து கடைபோட்டு கொரோனா என பெயர் வைத்தேன். கடை வைத்து ஒரு வாரம் கூட ஆகவில்லை ஊர் முழுக்கத் தெரிந்துவிட்டது. வியாபாரமும் பரவாயில்லை” என நம்பிக்கையுடன் பேசினார்.