நீங்கள் பலூனா? பேப்பரா?
ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார் அந்த ராஜாவுக்கு 9001 கவலைகள்.
ஒவ்வொரு வாரமும் இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகும்.
‘சாப்பிட வாங்க மகாராஜா’! என்று பணிப்பெண் கனிவுடன் அழைத்தால் கூட கன்னத்தில் கை வைத்துக் கொண்டு குறைந்தது அரை மணி நேரம் கவலைப்படுவார்.
‘ஐயோ! இன்னைக்கு என்ன சாப்பாடு இருக்குமோ!
அதைச் சாப்பிட்டா உடம்புக்கு என்னென்ன வருமோ!
இன்னது என்றில்லை, எல்லாவற்றுக்கும் அவரால் கவலைப்பட முடிந்தது.
ஒருநாள் உச்சகட்டமாக அவருக்கு ஒரு கவலை வந்தது அது அவருடைய 9002 வது கவலை.
‘இப்படி தொட்டதற்கெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் அதனால் ஏதாவது மனக்கோளாறு ஏற்படுமா?’
அலறியடித்துக் கொண்டு தனது அத்தனை மந்திரிகளையும் ஞானிகளையும் சபைக்கு அழைத்தார் அந்த ராஜா.
‘நீங்கள் என்ன செய்வீர்களோ,
ஏது செய்வீர்களோ எனக்குத் தெரியாது. என்னுடைய அத்தனை கவலைகளுக்கும் தீர்வு வேண்டும் இன்றே’
ஒரு மூத்த அமைச்சர் முன்னுக்கு வந்தார்.
‘ராஜா உங்கள் கவலைகள் என்னென்ன என்று சொல்லுங்கள் ஒவ்வொன்றாக
அலசி விடலாம் எல்லா கவலைகளுக்கும் நிச்சயம் தீர்வு உண்டு.’
‘அப்படி எல்லாம் ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டிருக்க முடியாது. எனக்கு
9000 க்கும் மேலான கவலைகள் உள்ளன எல்லாவற்றுக்கும் சேர்ந்து ஒரே தீர்வைச் சொல்லுங்கள்.’
‘அதெப்படி ராஜா!தனித்தனி பிரச்சினைகளுக்கு தனித்தனி தீர்வு தானே இருக்க முடியும்.’
‘அதெல்லாம் எனக்குத் தெரியாது.எந்த நேரத்துக்கும்,எந்த சூழ்நிலைக்கும் பொருந்தும் ஒரு தீர்வை அளித்தே ஆக வேண்டும் இது என் கட்டளை!’
ஒரு வெண்தாடி ஞானி கையை உயர்த்தினார்.
‘அப்படி ஒரு தீர்வு என்னிடம் இருக்கிறது!’
‘சபாஷ்! நீர் தான் உண்மையான ஞானி’
அந்த ரகசிய மந்திரத்தை நான் உங்களுக்கு எழுதித் தருகிறேன். எப்பொழுதெல்லாம் பிரச்சனைகள் தோன்றுகிறதோ, எப்பொழுதெல்லாம் உங்களுக்கு கவலைகள் பிறக்கின்றதோ அப்போதெல்லாம் இந்த மந்திரத்தை ஆத்மார்த்தமாக உச்சாடனம் செய்யுங்கள். எல்லாம் சரியாகி விடும்.
‘சொல்லுங்கள், சொல்லுங்கள், அந்த மந்திரம் என்ன?’
ஒரு துண்டுச் சீட்டில் அந்த மந்திரத்தை எழுதி ஒரு பெட்டியில் போட்டு பூட்டி ராஜாவிடம் கொடுத்தார் அந்த வெண்தாடி ஞானி
அன்றிரவு நிம்மதியாகத் தூங்கினார் ராஜா. காலையில் கண் விழித்து சோம்பல் முறித்துக் கொண்டிருக்கும் போது வாயிற்காவலன் ஓடி வந்தான்.
‘மகாராஜா, மகாராஜா! எதிரி நாட்டு அரசன் நம் மீது படை கொண்டு வருகிறான்!’
‘ஆ’!
அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டார் ராஜா.
சாப்பிடவே 20 தடவை யோசிக்கிற ராஜா போர் என்றால் சும்மா இருப்பாரா?
என்ன செய்வது?
உச்சக்கட்ட பிரச்சனை, உச்சக்கட்ட கவலை.
கடகடவென்று உள்ளே ஓடினார் வியர்க்க விறுவிறுக்க அந்த பெட்டியைத் திறந்தார். உள்ளே சுருண்டு கிடந்த அந்தக் காகிதத்தைப் பிரித்து படபடப்புடன் படித்தார்.
‘இதுகூட கடந்து சென்று விடும்’!
ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை,
மீண்டும் படித்தார். மீண்டும் புரியவில்லை.
இது கூட என்றால்
எது கூட? போரா? கடந்து சென்று விடுமா? அதெப்படி?
10 முறை உச்சரித்திருப்பார். மின்னல் வெட்டு போல திடீரென்று புரிந்து விட்டது.
‘யாரங்கே?’
வாளை உருவிக் கொண்டு போர்க்களத்துக்கு புறப்பட்டு விட்டார் ராஜா. அனைவருக்கும் ஆச்சரியம்.
மீண்டும் ஆச்சரியம்.
எதிரி நாட்டு மன்னன் வீழ்ந்து விட்டான் .
9001 கவலைகளை உடைய ராஜாவுக்கே வெற்றி.
ராஜாவுக்குத் தலை கால் புரியவில்லை.
எத்தனை
அற்புதமான வாக்கியம்! எத்தனை
மகத்தான ரகசியம்!
இது கூட கடந்து சென்று விடும்.
ஆம்! உச்சக்கட்ட சிக்கல், உச்சக்கட்டப் பிரச்சனை, மெய்யாகவே கடந்து சென்று விட்டது.
அடுத்தடுத்த பல சிக்கல்கள் வந்தன, நாட்டில் பஞ்சம்,
மக்கள் கிளர்ச்சி, விலைவாசி உயர்வு அடுக்கடுக்காக பல பிரச்சனைகள் வந்து சேர்ந்தன.
சிறிதும் பெரிதுமாக ஒவ்வொரு முறையும் அந்த ரகசிய சீட்டை எடுத்துப் பார்த்துக் கொண்டார் ராஜா.
எல்லாமே கடந்து சென்று விட்டது.
பிரச்சனை என்பது ஒரு வகையில் காற்றைப் போன்ற தூதன் ஓரிடத்தில் நிற்காது. நமது புத்தியும் மனமும் பலூனாக இல்லாதவரை அந்த காற்று அங்கு தேங்கிக் கிடக்காது.
நமது சிந்தனையை ஒரு காகிதமாக வைத்துக் கொண்டால் காற்றை உதைத்துத் தள்ளிக் கொண்டு நாம் பறந்து முன்னேறிப் போய்விட முடியும்.